மாணவி கொலை! எதிரிக் கூண்டில் நின்ற எதிரியைப் பார்த்து எச்சரித்த நீதிவான்!!

“மனிதப் பிறப்பாக இருந்து கொண்டு மிருகமானால் வாழ முடியாது” என மாணவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை யாழ்.நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் கண்டித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது கணவரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. இதன்போதே சந்தேகநபரை நீதிவான் இவ்வாறு கண்டித்தார்.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுலாக் கடற்கரையில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதி வருட மாணவி ஒருவர் நேற்று புதன்கிழமை பிற்பகல் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரது சடலம் கடலுக்குள் தள்ளிவிடப்பட்டிருந்தது.

கொழும்பு பேருவளையைச் சேர்ந்த ரோசினி ஹன்சனா (வயது-29) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த மாணவியைக் கொலை செய்ய குற்றச்சாட்டில் கிளிநொச்சி – பரந்தன் இராணுவ முகாமில் பணியாற்றும் படைச் சிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு, இன்று யாழ்.நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இறப்பு விசாரணை இடம்பெற்றது. கொல்லப்பட்ட மாணவியின் தாயாரும், சகோதரியும் மன்றில் முன்னிலையாகி இறப்பு விசாரணையில் சாட்சியமளித்தனர்.

“எதிரி மகளை 2017 ஆம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்ததுடன் அவருடன் வாழ்ந்து வந்தார். அண்மைக் காலமாக இருவருக்கும் முரண்பாடுகள் இருந்தன” என்று மாணவியின் தாயார் சாட்சியமளித்தார்.

“மனிதனாக இருந்தால் மட்டுமே வாழ முடியும். மனிதப் பிறப்பாக இருந்து கொண்டு மிருகமானால் வாழ முடியாது” என்று நீதிவான் எதிரிக் கூண்டில் நின்ற எதிரியைப் பார்த்து எச்சரித்தார்.

அத்துடன் எதிரியை வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்று, வழக்கு விசாரணையை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.
Previous Post Next Post