யாழில் மண் ஏற்ற வாள்களுடன் வந்த குழு! பொலிஸார் மீது தாக்குதல்!! அதிரடிப் படை குவிப்பு!!!

வாள்களுடன் வந்து சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் சிலர் ஈடுபட்டதால் வடமராட்சிப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வடமராட்சி குடத்தனை பெற்பதி பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு வந்த குழு மக்களை மிரட்டிய நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று 10 மணியளவில் சட்டவிரோத மணல் அகழ்வுக்காக டிப்பர் வாகனங்களுடன் சென்ற குழுவினரைத் தடுக்கச் சென்ற மக்களை வாள்களைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

அவர்கள் மதுபோதையில் இருந்ததை அவதானித்த மக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து காங்கேசன்துறையிலிருந்து சென்ற விசேட பொலிஸ் குழு அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்த நிலையில் மணல் ஏற்றச் சென்ற குழு பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது பொலிஸாரின் வாகனங்கள் சிலவும் சேதமடைந்துள்ளன.

உடனடியாக சம்பவ இடத்துக்கு சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post