இலங்கையிலும் கோரத் தாண்டவம் ஆட ஆரம்பித்தது கொரோனா! 3 நாட்களில் 5 பேர் பாதிப்பு!!

உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது இலங்கைக்குள்ளும் ஊடுருவியுள்ளது.

அந்தவகையில், கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட மேலும் மூன்று இலங்கையர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். சுகாதார சேவைப் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க இதனை சற்று முன் உறுதிப்படுத்தினார்.

ஜேர்மனிலிருந்து நாடு திரும்பிய 41 வயதுடைய ஆண், இத்தாலியிருந்து நாடு திரும்பிய 37 வயதுடைய ஆண் ஆகியோரும், இத்தாலியிலிருந்து நாடு திரும்பி கந்தக்காடு முகாமில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட 43 வயது நபர் ஆகியோருக்கே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 41 மற்றும் 43 வயது நபர்கள் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையிலும், 37 வயது நபர் பொலன்னறுவை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நபர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

  • 05 பேருக்கு கொரோனா தொற்று
  • 64 பேர் மருத்துவக் கண்காணிப்பில்
  • ஆயிரத்து 200 பேர் பயணிகள் தடுப்பு நிலையங்களில்
  • 14 வைத்தியசாலைகள் தயார் நிலையில் 


Previous Post Next Post