யாழில் ஒரேநாளில் 3 பேருக்குக் கொரோனா! சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை!!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (01.04.2020) மட்டும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது யாழில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

இந் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய நிர்ணயிக்கப்பட்ட 14 நாள் கால அவகாசத்தின் பின்னரே யாழில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும், இதனால் பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

சுவிஸிலிருந்து வந்த போதகர் சற்குணத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 20 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூவருக்கு தொற்று உறுதியானது. சுவிஸ் போதகர் கடந்த 15ஆம் திகதியே யாழிலிருந்து வெளியேறி விட்டார்.

போதகருடன் 15ஆம் திகதி வரை தொடர்பில் இருந்தவர்களே பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுவிஸ் போதகருடன் இறுதியாக அவர்கள் தொடர்பு கொண்ட 17 ஆம் நாளிலேயே அவர்கள் பலாலியில் பரிசோதிக்கப்பட்டனர். பரிசோதனை வரை அவர்களில் கொரோனா தொற்று இருப்பதற்கான எந்த அறிகுறியையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே தொற்று இருப்பது தெரிய வந்தது.

சுவிஸ் போதகருடன் நெருங்கி பழகிய இன்னுமொரு போதகர், சுவிஸ் போதகரின் வாகனச் சாரதி மற்றும் அவருக்குச் சமையல் பணி செய்த பெண் ஆகிய மூவருமே கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று கொரோனாவினால் இலங்கையில் 3வது உயிரிழப்பு நேற்று பதிவாகியது. அவருக்கும் நோய் அறிகுறி தென்படவில்லை. நேற்று திடீரென உடல்நிலை மோசமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேபோல சில தினங்களின் முன்னர் உயிரிழந்த இரண்டாவது நோயாளியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இதனால் நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தாமல் தொற்று நீடிக்க வாய்ப்புள்ளதா என சுகாதாரத்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்த அபாயங்களிலிருந்து தப்பிக்க, வீடுகளை விட்டு வெளியேறாமல், கூட்டம் கூடாமல்- சமூக இடைவெளியை பேணினாலே போதுமென சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகிறார்கள்.

கொரோனா பற்றிய செய்திகளை அதிகம் படித்து, தேவையற்ற மனப்பீதி கொள்ளாமல்- அதேவேளை, சந்தேகங்கள் இருந்தால் தொலைபேசி வழியாக சுகதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விடயத்தை அறிவித்து, பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Previous Post Next Post