யாழ்.கொக்குவிலில் வீதியில் நடமாடிய 40 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை! 5 பேருக்குத் தொற்று!!


யாழ்ப்பாணத்தில் இன்று தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி வீதியில் பயணிப்பவர்கள் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து இந்த நடவடிக்கையை இன்று முற்பகல் கொக்குவில் கே.கே.எஸ் வீதியில் குளப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் ஆரம்பித்தனர்.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு வரும் ஒக்டோபர் முதலாம் திகதிவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி தேவையற்று நடமாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி பணித்திருந்தார்.

இந்த நிலையில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர்ந்து வீதிகளில் நடமாடுபவர்களுக்கு அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை இணைந்து இன்று முற்பகல் கொக்குவில் கே.கே.எஸ் வீதியில் குளப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் வீதியில் நடமாடுவோர் மீது அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இந்தச் செய்தி வெளியிடப்படும் வரை 40 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 5 பேருக்கு கோவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.
அடையாளம் காணப்படும் தொற்றாளர்கள் கோப்பாய் கோவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post