இங்கிலாந்தில் ஒமெக்ரோன் தொற்று! மருத்துவத்துறை அதிர்ச்சி!!


  • குமாரதாஸன். பாரிஸ். 
இங்கிலாந்தில் ஒமெக்ரோன் வைரஸ் தொற்றுக் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற தகவலைப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நேற்று வெளியிட்டிருக்கிறார். நாட்டில் புதிய அலை (tidal wave) ஒன்று உருவாகுவதைப் பிரதமர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

உலகில் ஒமெக்ரோன் தொடர்புபட்ட முதலாவது உயிரிழப்பு அறிவிக்கப் படுவது இதுவே முதல் முறை ஆகும்.
 
இங்கிலாந்தில் மொத்த தொற்றுக்களில் இருபது வீதமானவை ஒமெக்ரோன் வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ளன என்ற தகவலைச் சுகாதார அமைச்சர் ஜாவிட் வெளியிட்டிருக்கிறார்."இதுவரை கண்டிராத, அபரிமிதமான வேகத்தில் ஒமெக்ரோன் பரவுகிறது"என்று அவர் கூறியிருக்கிறார். 

பிரிட்டிஷ் அரச அதிகாரிகளது கணிப்பீடுகளின் படி இம் மாத இறுதியில் நாளொன்றுக்கான தொற்று எண்ணிக்கை லட்சங்களை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுவதாக 'ரொய்ட்டர்' செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

ஒமெக்ரோன் தொற்றாளர் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரங்களில் 50 வீதமாக உயர்ந்து 5 ஆயிரத்தை எட்டியுள்ளது என 'டெய்லி மெயில்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இன்று வெளியிட்டிருக்கின்ற ஆய்வு முடிவு முழுமையாக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களையும் ஒமெக்ரோன் தாக்கும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
 
இதேவேளை, எதிர்பார்த்ததை விடவும் மிகத் தீவிரமாகப் பரவிவருகின்ற ஒமெக்ரோன் திரிபு விரைவில் டெல்ரா வைரஸின் இடத்தைப் பிடிக்கும் என்றும், அதன் பாதிப்புகள் எதிர்வரும் வாரங்களில் தெரியும் என்றும் பிரான்ஸின் அறிவியல் ஆலோசனைச் சபை தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் தற்சமயம் உருவாகியிருக்கின்ற ஐந்தாவது தொற்றலைக்கு டெல்ரா திரிபு வைரஸ் தொற்றுக்களே பிரதான காரணியாக இருக்கிறது.அதன் பின்னால் அடுத்து ஒமெக்ரோன் திரிபு வேகமாகப் பரவத் தொடங்கி இருக்கிறது.

இங்கிலாந்து நிலவரத்தின்படி பார்த்தால் பிரான்ஸில் அடுத்தடுத்த மாதங்களில் ஒமெக்ரோன் ஆறாவது தொற்றலை ஒன்றை உருவாக்கக் கூடிய ஆபத்து இருப்பதாக பாரிஸ் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
Previous Post Next Post