யாழ்.மாநகர சபை பட்ஜெட் மீண்டும் தோல்வி! அதிகாரத்தைப் பயன்படுத்தினார் முதல்வர்!!

யாழ்.மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இரண்டாவது தடவையும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தடவைகளும் வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வரவு-செலவுத் திட்டம் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டதாக முதல்வர் இமானுவேல் ஆனல்ட் பிரகடனப்படுத்தியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சிறப்பு அமர்வு முதல்வர் இமானுவேல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது. இதில் 43 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்டவர்களுள் வரவு-செலவுத் திட்டத்திற்கு 19 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 24 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 12 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்கள் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

இன்றைய சபை அமர்வின் போது உறுப்பினர்களுக்கிடையே கருத்து மோதல்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்.மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் கடந்த மாதம் இடம்பெற்ற வாக்கெடுப்பிலும் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

Previous Post Next Post