யாழ்.மாவட்ட தேர்தல் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்? தெரிவத்தாட்சி அலுவலர் தகவல்!!

யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முடிவுகள் வரும் 6ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு விடும் என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் க. மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பொதுத் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும்.

இம்முறை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 508 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு ஏதுவாக, அதற்கு உரிய ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கான அறிவுறுத்தல்களை சுகாதார பரிசோதகர்கள் வழங்குவார்கள். அவற்றை பின் பற்றி அவர்கள் வாக்களிக்க முடியும்.

வாக்களிப்பு தினமான புதன்கிழமை காலை 07 மணி முதல் மாலை 05 மணி வரையில் வாக்களிக்க முடியும். எனவே வாக்காளர்கள் தற்போதைய நிலமைகளை கருத்தில் கொண்டு நேரத்திற்கு சென்று வாக்களிக்கவும். சுகாதார நடைமுறைளை கடைப்பிடித்து அங்குள்ள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல்களை பின் பற்றி வாக்குகளை அளிக்க முடியும்.

வாக்களிப்பு அன்றைய தினம் முடிவடைந்த பின்னர் வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்கு பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையத்திற்கு பாதுகாப்பான முறையில் எடுத்து வரப்படும். வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கு பெட்டிகள் பொறுப்பேற்கப்பட்டு, அன்றைய தினம் இரவு பாதுகாக்கப்பட்டு மறுநாள் 06ஆம் திகதி வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் 89 வாக்கெண்ணும் நிலையங்கள் உள்ளன. அவற்றில் 16 தபால்மூல வாக்கெண்ணும் நிலையங்களும், 73 மற்றைய வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கெண்ணும் பணிகள் காலை 07 மணிக்கு ஆரம்பமாகும். முன்னதாக தபால்மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றின் முடிவுகள் காலை 08 மணிக்கு முதல் அறிவிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்.

அதன் பின்னர் ஏனைய வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு முதல் வாக்கெண்ணும் பணிகள் முடிவடையும் என எதிர் பார்க்கிறோம் – என்றார்.
Previous Post Next Post