சுவிஸில் ரயில்களை புரட்டிய"மதிஸ்"புயல்! பிரான்ஸிலும் கடும் காற்று மரம் வீழ்ந்து ஒருவர் சாவு!!

"மதிஸ்"(Mathis) எனப் பெயரிடப்பட்ட புயல் காற்றினால் சுவிற்சர்லாந்தில் நேற்று வெள்ளிக்கிழமை பரவலான சேதங்கள் ஏற்பட்டன. இரண்டு பிராந்திய ரயில்கள் அரைமணி நேர இடைவெளியில் அடுத்தடுத்துத் தடம் புரண்டன. மணிக்கு 130 க்கும் அதிக கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசிய கடும் புயல் காற்றினாலேயே ரயில்கள் கவிழ்ந்தன என்று கூறப்படுகிறது. அதனால் இந்தச் சம்பவம் நாட்டின் செய்தி ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்திருந்தது.

சுவிஸ் சொலதூண் மற்றும் பேர்ண் (Solothurn - Bern) இடையிலான ரயில் முதலில் தடம் புரண்டது. அந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். அடுத்த விபத்து Lüscherz என்ற இடத்தில் சற்று நேர இடைவெளியில் இடம்பெற்றது. அதில் ரயில் சாரதி உட்பட மூவர் காயமடைந்தனர்.

இரண்டு சம்பவங்களிலும் மூன்று சிறுவர்கள் உட்பட 15 பேர்வரை காயமடைந்தனர் என்றும், இதுவரையான தகவல்கள் புயல் காற்றின் காரணமாகவே இந்த விபத்துக்கள் நேர்ந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றன என்றும் பேர்ண் கன்ரன் பொலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

விபத்துக்கள் இடம்பெற்ற ரயில் மார்க்கங்களில் நேற்று மாலை சேவைகள் தடைப்பட்டிருந்தன.

இதேவேளை, "மதிஸ்" புயல் காற்றினால் பிரான்ஸின் வடகிழக்குப் பகுதியில் பரவலான சேதங்கள் ஏற்பட்டன. Vosges என்ற இடத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததால் அதில் சிக்குண்டு 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். சுமார் எண்பது மாவட்டங்களில் புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி: தாஸ்நியூஸ் - பாரிஸ்
Previous Post Next Post