![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5_ykvhRqRZV9z2W5QEUhNPeEeeuUkvScQb3vcvn7XRNKBa1YJ4n2GESbl12yZ9iEx2_weKf-Is2WA59fgkgkPIM0ItXVxlfqp7VvKb0l9GJLGBeA7TqEzRbkIIE7ySAHQwWTMHciZfdBrp0tVj1Y0-xkVQe7IWXDpkc5P_lORp_4YvVuNjFmqzGNz/s16000/IMG-20230415-WA0017.jpg)
கனடாவிலிருந்து பணம் அனுப்பப்பட்டு இந்தியாவிலிருந்து வழங்கப்பட்ட நட்புரீதியான கட்டளையில் செய்யப்பட்டதாக சந்தேக நபர்களினால் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறையைச் சேர்ந்த 32 மற்றும் 24 வயதுடைய இருவரே இன்று கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி அனலைதீவில் வீடுபுகுந்த வன்முறைக் கும்பல் அங்கு வசித்த வயோதிபர்கள் இருவர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட மூவரை கடுமையாகத் தாக்கி 4 பெறுமதியான அலைபேசிகள் மற்றும் 4 வலையல்கள் உள்ளிட்ட 13 லட்சம் பெறுமதியான பொருள்கள் கொள்ளையிடப்பட்டன.
சம்பவத்தில் கனடாவில் வசிக்கும் அனலைதீவைச் சேர்ந்த நாகலிங்கம் சுப்ரமணியம் (குருசாமி வயது 75) என்பவர் கால்கள் அடித்து முறிக்கப்பட்டு படுகாயமடைந்தார். அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கனடா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்தின் உத்தரவில் யாழ்பபாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான மாவட்ட குற்றத்தப்படுப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
விசாரணைகளின் அடிப்படையில் கடந்த மாதம் அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மேலதிக விசாரணைகளில் பருத்தித்துறையைச் சேர்ந்த 32 வயதுடைய முதன்மை சந்தேக நபர் மற்றும் 24 வயதுடையவர் என இருவர் கைது செய்யப்பட்டனர்.
கனடாவில் உள்ள ஒருவர் இந்தியாவில் வசிக்கும் ஒருவர் ஊடாக ஒருங்கிணைத்து இந்த தாக்குதலை திட்டமிட்டதாக முதன்மை சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
“இந்தியாவில் வசித்த வரதன் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார். அதனால் திட்டமிட்டபடி எதுவுமே செய்ய முடியவில்லை.
வேலனைக்குச் சென்று மீன்பிடிப் படகை வாடகைக்கு அமர்த்தி அனலைதீவு சென்று சொல்லப்பட்டவர் மற்றும் அவர் சார்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம். நகைகள் மற்றும் அலைபேசிகளை எடுத்துக்கொண்டு தப்பி வந்துவிட்டோம்” என்று முதன்மை சந்தேக நபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரிடமிருந்தும் கொள்ளையிடப்பட்ட தங்க வலையல்கள் மற்றும் மோதிரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நாளை முற்படுத்தப்படவுள்ளனர்.