யாழில் தடம்புரண்டது உழவு இயந்திரம்! பெட்டிக்குள் அகப்பட்ட தொழிலாளர்கள்!!

யாழ்.பொன்னாலைச் சந்தியில் உழவு இயந்திரம் ஒன்று தடம்புரண்டதில் அதில் பயணித்த எட்டுப் பேரில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், ஏனைய ஆறு பேர் காயங்களுக்குள்ளகியுள்ளனர்.

இச் சம்பவம் பொன்னாலைச் சந்தியில் இன்று காலை 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காரைநகர் வீதி புனரமைப்புப் பணிக்காக 10 தார் பரல்களை ஏற்றியவாறு எட்டுத் தொழிலாளர்கள் உழவு இயந்திரத்தில் பயணித்துள்ளனர்.

பொன்னாலை வரதராஜ பெருமாள் ஆலய வீதியில் இருந்து பொன்னாலை சந்தி வழியாக காரைநகர் வீதிக்கு உழவு இயந்திரத்தை திருப்ப முயன்றபோதே உழவு இயந்திரத்தில் இருந்து அதன் பெட்டி தனியாகக் கழன்று தடம்புரண்டது.

இந்த விபத்தின் போது உழவு இயந்திரப் பெட்டி தலைகீழாகக் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்தவர்களில் சிலர் தூக்கி வீசப்பட்ட நிலையில் சிலர் பெட்டிக்குள் அகப்பட்டுக் கொண்டனர்.

படுகாயமடைந்த இருவர் உள்பட ஆறு பேர் உடனடியாக மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்து அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இவ் விபத்துத் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Previous Post Next Post