ஊரடங்கை அமுல்படுத்துவதற்காக தலைவிரித்தாடுகின்ற அநியாயங்கள்!

கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்காக உலக நாடுகள் இறுக்கமான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளன. இதில் ஊரடங்கு உத்தரவு என்பது முக்கியமானதும் முதன்மையானதுமான நடைமுறையாக உள்ளது.

எனினும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த வதற்காகப் பொலிஸார் எடுக்கின்ற நடவடிக்கைகளைப் பார்க்கும்போது மனிதாபிமானத்துடன் பொலிஸார் நடந்த கொள்ள மாட்டார்களா? என்றே எண்ணத் தோன்றும்.

அதிலும் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது இந்தியப் பொலிஸார் நடத்துகின்ற தாக்குதல்களைப் பார்க்கும்போது இந்தியப் பொலிஸாரில் மனநோயாளிகள் பலர் இருப்பர் போல் தெரிகிறது. அந்தளவுக்கு அவர்களின் நடவடிக்கைகள் மிருகத்தனமானவையாக கணிப்பிடக் கூடியவை.
அவர்கள் போல் இலங்கைப் பொலிஸார் நடந்து கொள்ளவில்லையாயினும் இலங்கைப் பொலிஸாரில் சிலர் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்கள் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதுடன் ஊரடங்கு வேளை ஒற்றைக் கதவில் திறந்திருந்த வர்த்தகர்களிடம் இலஞ்சம் பெற்றுக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.

நாளாந்த சீவியத்துக்காக தெருவோரம் குந்தியிருந்து வெயிலில் காய்ந்து நான்கு மரக்கறியை விற்றுதன் குடும்பத்தின் பசி ஆற்ற நினைத்த ஏழையிடம் இரண்டாயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொள்கின்ற பொலிஸார் இருக்கின்றபோது, கொரோனா போன்ற கொடிய நோய்கள் எங்ஙனம் இல்லாது போகும் என்பதுதான் நம் கேள்வி.

இவை ஒருபுறமிருக்க, ஊரடங்கு வேளை நடமாடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சம்பந்தப்பட்டவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்து, அவற்றை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பதானது மிகப் பெரும் அநியாயமாகும்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்போது அதனைப் பின்பற்றுவது கட்டாயமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஊரடங்கு வேளை நடமாடினர் என்ற குற்றச்சாட்டில் குறித்த நபர் மீது சட்ட நடவடிக்கையோ அல்லது எச்சரிக்கையோ செய்வதை விடுத்து, சம்பந்தப்பட்டவரின் வாகனத்தைப் பறிமுதல் செய்து அதனைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கும் போது, தோல் இருக்கச் சுளை விழுங்கும் கூட்டம் அந்த வாகனத்தை அப்படியே கபளீகரம் செய்து விடும்.

ஆக, இது விடயத்தில் நீதிபரிபாலனம், அரச நிர்வாகிகள், அரசியல்வாதிகள் கவனம் செலுத்தி வாகனப் பறிமுதலை தவிர்க்க நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியமாகும்.
Previous Post Next Post