யாழ்ப்பாண மக்கள் வீதிக்கு வருவதை விரும்பாத இராணுவத் தளபதி!

யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப் பட்டாலும் மக்கள் கூட்டமாக வீதியில் நடமாடுவதை நாம் விரும்பவில்லை என்கின்றார் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நல்லிணக்க மையம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. நல்லிணக்க மையத்தை கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது மக்கள் பட்ட இன்னல்களை நாமறிவோம். இந்த நிலைமை இலங்கையில் மட்டுமல்ல முழு உலக நாடுகளிலும் இந்த ஊரடங்கு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது.

எனினும் எமது ஜனாதிபதி இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த ஊரடங்கு சட்டத்தினை நாம் தளர்த்துவதென முடிவெடுத்துள்ளோம்.

எனினும் அந்த ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தினாலும் பொதுமக்கள் கூட்டமாக வீதி இறங்குவதை நாங்கள் விரும்பவில்லை. தேவையானவர்கள் மட்டும் வீதிக்கு வாருங்கள். தேவையில்லாது வீதிகளில் பயணிக்காது தனித்திருத்தல் உங்களுக்கும் நல்லது. உங்களுடைய சமூகத்திற்கும் நல்லது.

எனவே மக்கள் இதனை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஊரடங்கு தளர்த்தப் பட்டிருந்தாலும் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிருங்கள் எனவும் இராணுவ தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்
Previous Post Next Post