இந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தவர் யாழில் தலைறைவு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

இந்தியாவிலிருந்து கஞ்சா போதைப்பொருளை கடத்தி வந்த வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த படகு உரிமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரால் தேடப்பட்டு வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படகு உரிமையாளரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் முன்னெடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை வேம்படிக் கடற்கரையில் நேற்று முன்தினம் காலை கஞ்சா பொதிகள் இரண்டு கடற்படையினரால் மீட்கப்பட்டன. எனினும் அதனைக் கடத்தி வந்தவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.


அந்தப் பொதிகளை இந்தியாவிலிருந்து எடுத்து வந்த படகும் மீட்கப்பட்டது. எனினும் படகின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிர நிலையை எட்டியுள்ளது. அதனால் அங்கிருந்து கஞ்சா பொதியை யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வருவோரால் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையிலேயே கஞ்சா ஏற்றி வந்த படகின் உரிமையாளரையும் கஞ்சா கடத்தி வந்தவர்களையும் கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை” என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.


இதனை அடுத்து பொதுமக்களின் தகவலுக்கமைய ஒருவரை இனங்கண்ட அதிரடிப்படையினர் அவரது வீட்டுக்கும் அவருடைய உறவினர் வீடுகளுக்கும் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் கஞ்சா கடத்திவந்தவர் என இனங்காணப்பட்டவர் இன்னும் தலைமறைவாகி இருப்பதனால் அவர் எங்கு இருக்கின்றார்? அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமா? அவரால் சமூகத்திற்கிடையில் கொரோனா பரவுமா? என்ற அச்சத்தில் பிரதேச சுகாதார பிரிவினரும் தேடலில் ஈடுபட்டுள்ளனர்.
Previous Post Next Post