போரால் பாதிக்கப்பட்ட மக்களைக் குறிவைத்து மோசடி! முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரக்கை!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
போரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வறுமையால் வாடுபவர்களுக்கு உதவுவதாத் தெரிவித்து தொலைபேசியில் தொடர்புகொள்ளும் குழு ஒன்று பணம் அனுப்புமாறு தெரிவித்து மக்களை ஏமாற்றிவரும் சம்பவங்கள் முல்லைத்தீவில் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றமை தொடர்பிலான ஆதாரங்கள் இன்று கிடைக்கப் பெற்றுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தும் சில நபர்கள், தாங்கள் போரால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான நிவாரணம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறுகின்றனர். 

அதேவேளை தொடர்புகொள்ளும் மக்களின் விபரங்களை முல்லைத்தீவில் உள்ள பிரபல தொண்டு நிறுவனங்களிடம் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிப்பதன் மூலம் மக்கள் அதனை முழுமையாக நம்புகின்றனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் வைப்பிட்டு விட்டு அதன் சிட்டையை, முல்லைத்தீவில் உள்ள மற்றொரு வங்கியிடம் ஒப்படைக்குமாறும் அவர்கள் நிவாரணத்திற்கான நிதியினைத் தருவார்கள் என்றும் ஏமாற்றிவருகின்றனர்.

இன்று மட்டும் இவ்வாறு ஏமாந்த இருவர் அவர்கள் குறிப்பிட்ட வங்கியில் பணத்தை வைப்பிட்டு விட்டு மற்றைய வங்கியில் சென்று பார்த்தபோதே தாம் ஏமாற்றப்பட்டமையை உணர்ந்திருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தில் இன்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவசரமாக வங்கிக்கு செல்லுமாறு குறித்த நபர் தெரிவித்ததை நம்பி, முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி வங்கிக்குச் சென்று அந்த நபருக்கு அழைப்பை எடுத்துபோது, உடனடியாக 7500.00 நிதியை வங்கியில் வைப்பிலிடுமாறு நபர் தெரிவித்திருக்கின்றார். கையில் பணமில்லாமல் திண்டாடிய குறித்த வயோதிபத் தாய் முச்சக்கரவண்டிச் சாரதியிடம் கடனாகப் பெற்றே பணத்தைக் கட்டி ஏமாந்த அவலம் இடம்பெற்றிருக்கின்றது.

இந்நிலையில் குறித்த வங்கிகளின் பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

ஏற்கனவே பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களே இலக்குவைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுவருகின்றனர். எனவே இந்தத் தகவலை அறிந்துகொள்பவர்கள் உடனடியாக அனைவருக்கும் தகவலைப் பகிர்ந்து ஏனைய ஏழைகளையாவது காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.
Previous Post Next Post