யாழில் கட்டுப்பாடுகளை மீறி இயங்கிய மதுபானசாலை பொலீசாரால் முற்றுகை!


யாழ்.நல்லுார் பின் வீதியில் இராமசாமி பரியாரியார் சந்தியை அண்மித்த பகுதியில் உள்ள மதுபானசாலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு பெருமளவு மதுபானம் மீட்கப்பட்டதுடன், மதுபானம் வாங்க வந்தவர், விற்றவர் என அனைவரும் கைது செய்யப்பட்டள்ளனர்.

அத்துடன் குறித்த மதுபானசாலைக்கு மதுவரித் திணைக்களத்தினால் சீல்வைக்கப்பட்டுள்ளது. 

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வரும் ஜூன் 7ஆம் திகதிவரை மதுபான சாலைகளை மூட மதுவரி ஆணையாளர் கட்டளையிட்டுள்ள நிலையில் அதனை மீறி மதுபான சாலையைத் திறந்த குற்றச்சாட்டில் அதன் முகாமையாளர், விற்பனையாளரும் அரச சாராயத்தை சட்டத்துக்குப் புறம்பாக வாங்கிய குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்றது.
கோப்பாய் மதுபான சாலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற புலனாய்வுப் பிரிவு மற்றும் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மூவரைக் கைது செய்தனர்.

அத்துடன், மதுவரி ஆணையாளரின் உத்தரவை மீறியதாக மதுபான சாலைக்கு சீல் வைக்குமாறு மதுவரித் திணைக்களத்துக்கு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது. அதனால் குறித்த மதுபான சாலை சீல் வைக்கப்பட்டது.

அத்துடன், சட்டத்தை மீறி மதுபான சாலையில் விற்பனைக்கு வைத்திருந்த 750 மில்லி லீற்றர் அளவுடைய 4 போத்தல்களும் 185 மில்லி லீற்றர் அளவுடைய 100 போத்தல்களும் மற்றும் 8 பியர் போத்தல்களும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் மூவரும் கோப்பாய் பொலிஸாரிடம் முற்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.
Previous Post Next Post