யாழில் கனடாவிலிருந்து வந்த தம்பதிக்கு வீடு புகுந்து வாள்வெட்டு!

யாழ். அனலைதீவில் தங்கியிருந்த கனடா பிரஜைகளின் இல்லத்திற்குள் நுழைந்து பெருந்தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதோடு கனடாப் பிரஜை மீதும் வாள்வெட்டும் இடம்பெற்றுள்ளது.

கனடாவில், இருந்து இரண்டு மாதங்களிற்கு முன்னர் அனலைதீவிற்கு வந்து வீடு புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குடும்பத்தவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் 12 மணியளவில் கதவை உடைத்து உட்புகுந்த நால்வர் அடங்கிய கும்பலே இவ்வாறு வாள் வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டு 3 ஆயிரம் டொலர் மற்றும் கடவுச் சீட்டு உட்பட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வாள் வெட்டிற்கு இலக்கானவரின் வீட்டில் அயலில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் இரு ஆசிரியர்களும் கனடாவில் இருந்து வந்த இவரது மனைவியும் தங்கியிருந்த சமயம் நேற்று முன்தினம் அதிகாலை 12 மணியளவில் முகங்களை கறுப்புத் துணியால் மூடியவாறு 4 பேர் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

இவ்வாறு நுழைந்த கும்பல் வீட்டில் தங்கியிருந்த ஆசிரியர்களை கட்டி வைத்துவிட்டு கனடாப் பிரஜையினை வாளால் வெட்டியதோடு கனடா கொண்டு செல்ல தயார் செய்யப்பட்ட பொதிகளையும் சேதப்படுத்தி கனடா பிரஜைகளின் உடமைகளை சல்லடைபோட்டு தேடியுள்ளனர். இதன்போதே 2 ஆயிரம் கனேடிய டொலர், ஆயிரம் அமெரிக்க டொலருடன் இலங்கை நாணயம் மற்றும் கடவுச் சீட்டையும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது படுகாயமடைந்தவரை அதிகாலையில் படகுமூலம் ஊர்காவற்றுறை கொண்டுவந்து அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post