யாழில் தாய், மகள், மருமகன் மூவரும் தற்கொலை முயற்சி! தாயார் உயிரிழப்பு!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நஞ்சருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் தாய் அவரது மகள், மகளின் கணவர் என மூவருமே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இதில் தாயார் உயிரிழந்துள்ள நிலையில் மகளும், மருமகனும் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தென்மராட்சி, மட்டுவில் சந்திரபுரம் வடக்கு செல்லப்பிள்ளையார் கோவிலடியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த நவரத்தினம் விமலேஸ்வரி (வயது-65) என்ற தாயார் உயிரிழந்துள்ளார். அவரது மகள் சிவலக்ஷன் கீர்த்திகா (வயது-35), மருமகன் சிவபாலன் சிவலக்ஷன் (வயது-35) ஆகியோர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக வட்டிக்கு வாங்கிய கடனால் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாகவே இந்த தற்கொலை முயற்சி இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிய வருகின்றது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post