யாழில் ஹெரோயின் விற்பனை! முஸ்லிம், தமிழ் பெண்கள் உட்பட நால்வர் கைது!!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்வதற்காகப் பொதி செய்து கொண்டிருந்த போது இரு பெண்களும் இரு ஆண்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த போதைப் பொருளை கொழும்பிலிருந்து கொண்டு வந்து தெல்லிப்பளை, வித்தகபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பொதி செய்து கொண்டிருந்தபோதே இன்று செவ்வாய்க்கிழமை நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 5 கிராம் 6 மில்லிகிராம் அளவுடைய ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அதன் பெறுமதி 3 இலட்சம் ரூபாயாகும்.

வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர் என்று அறிந்த சந்தேகநபர்கள் சுமார் 10 கிராம் போதைப் பொருளை மண்ணுக்குள் போட்டு கலந்துள்ளனர். மிகுதி பைக்கற்றுக்களில் பொது செய்யப்பட்ட நிலையிலேயே பொலிஸாரினால் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் வித்தகபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஆணும், 31 வயதுடைய பெண்ணும், கொழும்பு மோதரையிலிருந்து வருகை தந்திருந்த 31 வயமுடைய முஸ்லிம் ஆணும், 25 வயதுடைய முஸ்லிம் பெண்ணும் அடங்குகின்றனர்.

காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சி.டபிள்யூ.சேனாதீர தலைமையிலான சிறப்பு பொலிஸ் குழுவினர் இன்று மாலை 3 மணியளவில் முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கையின் போதே இந்தக் கைது இடம்பெற்றது.

சந்தேகநபர்கள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டதுடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் பைக்கற்றுக்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post Next Post