யாழில் லீசிங் பணியாளர்களால் தூக்கில் தொங்கி உயிரிழந்த இளம் தாய்!

யாழ்ப்பாணத்தில் அவமானம் தாங்கிக் கொள்ள முடியாத ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

லீசிங் நிறுவனத்தின் பணியாளர்கள் இருவர் தரக்குறைவாகப் பேசியதாலேயே குறித்த தாய் உயிரை மாய்த்துக் கொண்டதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் தாவடி தெற்கில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

அதேயிடத்தைச் சேர்ந்த சுவிதான் அநுசுயா (வயது-34) என்பவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார். அவருக்கு ஐந்து பிள்ளைகள். முதலாவது பிள்ளைக்கு பத்து வயதாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நயமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். அவரது விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கணவர் லீசிங் முறையில் மோட்டார் சைக்கிளை எடுத்துள்ளார். அதற்குரிய தவணைக் கட்டணங்களை அவர் செலுத்தாததால் லீசிங் நிறுவனத்தின் பணியாளர்கள் அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை சென்றுள்ளனர்.

கணவர் கிளிநொச்சிக்கு வேலைக்குச் சென்றிருந்த நிலையில் மனைவி அங்கு இருந்துள்ளார். லீசிங் பணத்தை ஒழுங்காகச் செலுத்தாததால் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய வந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் கணவர் வேலைக்குச் சென்றுள்ளதாகவும் இரண்டு நாட்கள் தவணை வழங்குமாறும் நிலுவைப் பணத்தைச் செலுத்துவதாகவும் மனைவி கேட்டுள்ளார். அதற்கு பணியாளர்கள் தரக் குறைவாகப் பேசியுள்ளனர்.

அதனால் இரு தரப்புக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அயலவர்கள் கண்டுள்ளனர். அதனால் மனமுடைந்த பெண் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

Previous Post Next Post