பிரான்ஸில் மே 11க்குப் பின் ஏற்படப் போகும் மாற்றங்கள்! பிரதமரின் உரையின் முழு வடிவம் காணொளியாகத் தமிழில்!! (வீடியோ)

சுகாதார அமைச்சர் ஆலிவர் வாரன் மற்றும் பிரதமர் எட்வார்ட் பிலிப் ஆகியோர் 2020 ஏப்ரல் 19 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 05:30 மணிக்கு ஒரு நீண்ட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்.

இதன்போது அவர்கள் பிரான்சின் தற்போதைய நிலமை மற்றும் முக்கிய கொள்கைகளை அறிவித்தனர்.  மே 11 க்குப் பிறகும் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பாது" என்று கூறி, இதற்கு மிக நீண்டகாலம் எடுக்கும் என பிரதமர் எச்சரித்தார்.

மே11க்கு பின்னராக நீண்டகாலத்துக்கு வைரசுடன் வாழவேண்டிய சூழ்நிலைக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம் என தெரிவித்த பிரதமர், "நாட்டு மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்" மற்றும் "வாழ்க்கையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துதல்" ஆகிய இரண்டு முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த 15 நாட்களுக்குள் உள்ளிருப்பிலிருந்து வெளியேறுவதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கும் என்று அவர் கூறினார்.
மே 11 முதல் பிரான்ஸ் தனது கடுமையான உள்ளிருப்பு நிலைமைகளை நீக்கத் தொடங்கும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஏற்கனவே அறிவித்துள்ளார் - ஆனால் கட்டுப்பாடுகளை தளர்த்துவது மெதுவாகவும் படிப்படியாகவும் இருக்கும்.

பாடசாலைகள் திறக்கத் தொடங்கும், அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படமாட்டாது. மற்றும் மாணவர்களுக்கும் சமவேளையில் பாடங்கள் நடத்தபடமாட்டாது. கிழமைவிட்டு கிழமை என சுகாதார, தற்காப்பு, பாதுகாப்பு ஆகிய விடயங்களை கவனத்தில் கொண்டு கல்விச் செயற்பாடுகள் அமைந்திருக்கும்.

குறைந்தபட்ச கோடை ஆரம்பம் வரை அருந்தகங்கள், உணவகங்கள் மீண்டும் திறக்கப்படாது, வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது, சமூக இடைவெளி மற்றும் வரிசையாக உட்செல்ல முடியும். மேலும் குறைந்தது 200 பேருடன் ஒரு குடும்ப கொண்டாட்டங்களை நடாத்துவது என்பதும் சாத்தியமற்றது.

பொதுப்போக்குவரத்துகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படுகின்றது. முகக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் மற்றும் நெருக்கடிகளை குறைக்கும் வகையில் இயன்றவரை வீடுகளில் இருந்து வேலை செய்யக்கூடியவர்கள் வேலை செய்ய கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

உள்ளிருப்பதன் நோக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைப்பதாகும். "அதை அடைய, பிரெஞ்சு விதிகளை மதிக்க வேண்டியது அவசியம். பொதுவாக, மக்கள் அதைச் செய்திருக்கிறார்கள்." முறையான சிகிச்சை முறை இனங்காணப்படவில்லை மற்றும் தடுப்பு மருத்து கண்டுபிடிக்கப்படாத நிலையிலும், முன்னரைப் போன்றதொரு நிலைமை உடனடிச்சாத்தியம் இல்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர், வைரஸ் தொற்று உள்ள எங்கள் சக குடிமக்களின் எண்ணிக்கை 2 முதல் 6 மில்லியன் வரையான மதிப்பீட்டினைச் சுட்டிக்காட்டி, இதன் ஆபத்தில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு தற்காப்புமுறைகளே சாத்தியம் என தெரிவித்திருந்தார்.

மேலும் தொற்று அடையாளம் காணப்பட்டவர்கள் வீடுகளிலோ அல்லது விடுதிகளிலோ தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். தற்போது நாளொன்று வைரஸ் தொற்றினை இனங்காண 25,000 சோதனைகளை" மேற்கொள்கையில் மே மாத பகுதியில் இது வாரத்துக்கு 500 000ஆக உயர்கின்றது.

மேலும் மனிதர்களிடத்தில் தடுப்பு மருந்து சோதனைகள் கோடை காலத்தில் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அச்சோதனைகள் முற்றுப்பெற ஒரு வருடம் எடுக்கலாம்.

அதேவேளை, கோடை விடுமுறை மற்றும் சுற்றுலா, சர்வதேச பயணம் எப்போது அனுமதிக்கப்படும் என்பது பற்றிய பதில் இல்லை. பிரான்சில் உள்ள 45வீத வயோதிப இல்லங்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. அதனால் அவ்வில்லத்தின் பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலுக்கு அமைய கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகளுடன் உறவுகளை அவர்களது குடும்ப உறுப்பினர் இருவர் மட்டுமே சந்திக்க அனுமதியளிக்கப்படுகிறது.

வயோதிபர்கள் முறையான பாதுகாப்புடன் வெளியில் செல்லலாம். ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுகாத்தல் என்பது பிறரையும் சேர்த்து பாதுகாத்துக் கொள்வதற்கு சமம், நாங்கள் எங்கள் பழக்கங்களை மாற்றுவதன் மூலம் இதை எதிர்த்துப் போராடுவோம்.

இது எங்கள் அடுத்த சவாலாக இருக்கும். நிலைமைகள் தாமதமாக முன்னேறி வந்தாலும், கடினமான காலகட்டத்தில் இருந்து நாம் இன்னும் வெளியேறவில்லை. பிரதமரின் கூற்றுப்படி, நாம் இரண்டு அத்தியாவசிய நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்:

•மருத்துவமனையின் திறனை மீட்டமைத்தல்: 

"மறுசீரமைப்பின் போது இந்த மருத்துவமனை திறன் மீண்டும் கணிசமாகவோ அல்லது அதிகமாகவோ இல்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும்"

•வைரஸ் சுழற்சியைக் கட்டுப்படுத்துதல்:

"வைரஸ் சுழற்சியை நாம் முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும்" மேலும் "சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால்இ ஒவ்வொரு நோயாளி மூலம் மூன்று அல்லது நான்கு பேர்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகக்கூடும் . 

•••மருந்துகள் தட்டுப்பாடு•••

நீண்டகாலத்துக்கு சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியவர்கள், கோமா நிலையில் உள்ளவர்களுக்கான மருந்துகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான மருந்துகள் பெரும் பற்றாக்குறையாகவுள்ளது. சுகாதாரத்துறை கேட்கின்ற எல்லாவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாத போதும், அவர்கள் கேட்டுக்கொண்ட சுவாசக்கவசங்களுக்கான நெருக்கடி ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளது.

தற்போது வாரத்துக்கு 45 மில்லியன் சுவாசக்கவசங்கள் தேவையாகவுள்ளது. எமது அதிஉச்ச இராஜதந்திர செயற்பாட்டு முறையில் இறக்குமதி செய்து கொடுத்து வருகின்றோம். வாரத்துக்கு 8 மில்லியன் பிரான்சில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், மிகுதி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் கையுறைகள், தற்காப்பு உடைகளுக்கான நெருக்கடி காணப்படுகின்றது. மேலும் 15 000 செயற்கை சுவாச வழங்கிகளும், மேலதிகமாக 15 000 நடமாடும் செயற்கை சுவாச வழங்கிகளும் யூன் மாதமளவில் கையிருப்பில் இருக்கும்.

இந்த சுகாதார நெருக்கடி மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் கொண்டுசெல்லும், உள்ளிருப்பினால் பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரம் 1945ற்குப் பின் மோசமான மந்தநிலைக்கு சென்றுள்ளது. அதாவது 2020ம் ஆண்டில் 8 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்தனர்.
Previous Post Next Post