“நாம் பகைமை மறந்து ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டிய நேரம்” -ஈஸ்டர் செய்தியில் யாழ்.ஆயர்

உயிர்த்த கிறிஸ்து உயிர்கொல்லி கொரோனாவை ஒழித்து உலக மக்களுக்கு உயிர்ப்பளிக்க வேண்டும் என ஈஸ்டர் செய்தியில் யாழ்.ஆயர் பேரருட்கலாநிதி யஸ்ரின் ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இறைமக்களாகிய நாம் எமது தவக்காலம் நிறைவடைந்து புனித வாரத்தில் தடம் பதிக்கின்றோம். கிறிஸ்து இயேசுவின் பாடுகள் - மரணம் - உயிர்ப்பு இன்றைய பயங்கரமான சூழலில் எமக்கு ஆழமான இறை விசுவாசத்தையும், இறைபராமரிப்பையும் உணர்த்தி நிற்கின்றது.

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டது போன்ற உணர்வில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் உறைந்து போயுள்ளது. மரணங்கள் மலிந்து, பொருளாதாரம் நலிந்து சொல்லொணா வேதனைகளுடன் மனுக்குலம் முழுவதும் கல்வாரிப் பாதையில், கொல்கொதா மேட்டில் சிலுவை சுமந்து நிற்கின்றது. நிச்சயம் ஆண்டவரின் உயிர்ப்பு நம்மை மீட்கும்.

வீடுகளுக்குள்ளே முடக்கப்பட்டு ஆலய வழிபாடுகளின்றி வாழும் நாம் எமது வீடுகளை ஆலயங்களாக மாற்றி குடும்ப செபங்களிலும், இறை தியானங்களிலும் ஈடுபட்டு இறை விசுவாசத்தை மேன்மேலும் ஆழப்படுத்த வேண்டும் என நன்றியோடு கேட்டுக்கொள்கின்றேன்.

இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் நாம் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அரசியல் ரீதியான பகைமைகளையும், சமூக ஏற்றத் தாழ்வுகளையும், மத ரீதியான பிரிவுகளையும் மறந்து, மன்னித்து மனிதநேயம் மிக்கவர்களாக ஒன்றிணைந்து, நாட்டு நலன், சமூகநலன், குடும்ப நலன் என்பவற்றை பேணிக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபடின் அபாயங்களிலிருந்து நாம் மீண்டெழ முடியும். ‘கொவிட் -19’ தொற்று யாரால் பரவிற்று? ஏன் பரவிற்று போன்ற கேள்விகளை முன்வைத்து வெறுப்புணர்வுகளையும், குரோத உணர்வுகளையும், தேவையற்ற பொய்யான பிரச்சாரங்களையும் களைந்தவர்களாய் கொரோனாவை ஒழிக்க இறைவன் துணையுடன் செப தபங்கள் வழி ஒன்றுபட்ட மக்களாக வாழ்வோம். “வாழ்வோர் இனி தங்களுக்காக வாழாமல், தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்” (2 கொரி. 5:15) 

அபாயகரமான இவ்வேளையில் நமது நாட்டில் தன்னலங்கருதாப் பணிபுரியும் அர்ப்பணிப்பு மிகுந்த அனைத்து உள்ளங்களையும் நன்றியோடு நினைவுகூருகின்றேன். நமது நாடு உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தாக்கத்தால்; பெருமளவு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பலரின் மனிதநேயப் பணிகளே காரணம் என்பதை நாம் நன்கறிவோம். நமது நாட்டு ஜனாதிபதி, பிரதமர், அரசாங்க தரப்பினர், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர், பொலிஸ் உள்ளிட்ட முப்படையினர் அரச மற்றும் தனியார் நிர்வாகத்துறையினர், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் அனைவருக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுதலையும் தெரிவிப்பதுடன் இறை ஆசீரையும் வழங்கி நிற்கின்றேன்.

கொரோனா தாக்கத்தால் உயிர் நீத்தவர்களின் ஆன்மா இறை சந்நிதானத்தில் நித்திய இளைப்பாறுதல் பெற பிரார்த்திப்பதுடன், நோய்வாய்ப்பட்டுள்ள அனைவரும் பூரண சுகமடையவும் பிரார்த்திக்கின்றேன். துன்புறும் மக்கள் அனைவரும் துன்பங்கள் நீங்கி அமைதியும் சமாதானமும் நிறைந்த வாழ்வுக்குள் பிரவேசிக்க உயிர்த்த இயேசு அருள்புரிவாராக.

நிறைவாக இறை மக்களாகிய நாம் கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பை நினைவுகூரும் இவ்வேளையில் உயிருள்ள இயேசு கிறிஸ்துவிடம் முழுமையாக எம்மை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். சிலுவைப் பாதையில் தனது திருக்குமாரனைப் பின்தொடர்ந்த அன்னை மரியாள் எம்முடனும் இத்துன்ப வேளையில் பயணிக்கின்றாள் என்பதை நம்பியவர்களாக அன்னையின் பரிந்துரைக்காக வேண்டி நிற்போம். புனிதர்களின் உறவை நாடுவோம்.

அனைவருக்கும் எனது இறை ஆசீரை வழங்கி செபித்து நிற்கின்றேன். உயிர்த்த இயேசு கொணரும் அன்பும் சமாதானமும் உங்கள் குடும்பங்களில் என்றும் தங்குவதாக, - என்றுள்ளது.
Previous Post Next Post