“கடைசியாக ஒரு முறை தந்தையுடன் பேச அனுமதியுங்கள்” முருகனின் உருக்கமான கடிதம்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தந்தையுடன் காணொளியில் தொலைபேசி ஊடாக பேசுவதற்கு கடைசியாக ஒரு முறையாவது சந்தர்ப்பம் தருமாறு ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவருகின்றனர்.

அவர்கள் உட்பட்ட ஏழுபேரும் தமிழக ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமையால் தொடர்ந்தும் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டிய சூழல் நிலவிவருகின்றது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முருகனுடைய சட்டத்தரணி புகழேந்தி அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசி முருகன் என்ற ஸ்ரீகரன் (மத்திய சிறை, வேலூர்) அவர்களின் தந்தையுடன்  video Call மூலம் பார்த்துப் பேசுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா்.

அக் கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ராசீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள முருகன் என்ற ஸ்ரீ கரன் (மத்திய சிறை, வேலூர்) அவர்களின் தந்தை திரு.வெற்றிவேல் (75) அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (நேற்று) (25-04-2020) இரவுக்குள் அவர் இறந்துவிடுவார்கள் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவரது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலங்கையில் உள்ள அவரது தந்தையுடன்video Call  இல் கடைசியாக பாா்த்து உரையாட மனிதாபிமான அடிப்படையில் உனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் மூலம் - விகடன்
Previous Post Next Post