யாழில் மகளைக் காதலித்த இளைஞனைப் பொலிஸாரை கொண்டு தாக்கிய தந்தை! (படங்கள்)

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி புகுந்த பொலிஸார் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டின் வேலி, மதில் என்பவற்றையும் சேதமாக்கி உள்ளனர்.

சண்டிலிப்பாய் இரட்டைப்புலவு வைரவர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் இன்று சனிக்கிழமை மானிப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சிவில் உடையில் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வீட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அதற்கு இளம் பெண்ணின் தந்தை கடும் எதிர்ப்பை தெரிவித்து இளைஞனை பல தடவைகள் மிரட்டியுள்ளார்.

அதற்கு இளைஞன் அடி பணியாததால், தனக்கும் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் இடையில் உள்ள செல்வாக்கான நட்புறவை பயன்படுத்தி, பொலிஸ் முறைப்பாடு எதுவுமின்றி இளைஞனை மிரட்ட முயற்சித்துள்ளார்.

அதனை அடுத்து இன்றைய தினம் சனிக்கிழமை மதியம் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இளைஞனின் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து இளைஞனை தாக்கியுள்ளனர்.
அதனால் வீட்டில் இருந்த இளைஞனின் சகோதரர்களும், அயல்வீட்டரும் இளைஞனை தாக்கிய சிவில் உடையில் வந்தவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என அறியாது அவர்கள் இருவரின் மீதும் தாக்குதல் நடாத்தினர்.
அதனால் அங்கிருந்து தப்பித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும், பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து மேலதிக பொலிஸாரை வரவழைத்து தம் மீது தாக்குதல் நடாத்திய இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தியதுடன், வீட்டின் வேலி மற்றும் மதில் என்பவற்றையும் சேதமாக்கினார்கள்.

பின்னர் அங்கிருந்த ஐந்து இளைஞர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

அதேவேளை முன்னதாக சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் தாக்கியதில் காயமடைந்த இளைஞனை நோயாளர் காவு வண்டியை அழைத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது பொலிஸார் நோயாளர் காவு வண்டியை திருப்பி அனுப்பினர் எனவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Previous Post Next Post