முதல் கொரோனா நோயாளி நானா? பிரான்ஸ் பொபினி நபர் அதிர்ச்சி! (வீடியோ)

“சாதாரண காய்ச்சல் என்றே முதலில் நினைத்தேன். அறிகுறிகள் வேறு விதமாக இருந்தன. நெஞ்சு வலி ஏற்பட்டது. ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்தேன். மறுநாள் அதிகாலை காரை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குச் செல்ல முடிவு செய்தேன்.”

” நான் தான் நாட்டின் முதலாவது கொரோனா நோயாளி என்று இப்போது வரும் செய்திகள் எனக்குப் பெரும் அதிர்ச்சியாய் உள்ளது. “ தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இவ்வாறு ஒர் அனுபவத்தை விவரிக்கிறார் 43 வயதான அம்ரூச் ஹமர். (Amirouche Hammar).

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் பரிஸின் புறநகர் பகுதியான பொபினியில் (Bobigny) வசிப்பவர்.


பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றிய முதலாவது நோயாளி உத்தியோகபூர்வமாக கண்டறியப்படுவதற்கு சுமார் ஒருமாதம் முன்னர் –

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் மட்டும் அது பரவிக்கொண்டிருந்த சமயத்தில் –

இந்த பொபினி வாசி வைரஸ் தொற்றுக்கு இலக்கானார் என்ற புதிய தகவல் காலதாமதமாக இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. நோய் தொற்றிய தகவலை மருத்துவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னரே இவரிடம் தெரியப்படுத்தியுள்ளனர். இதனால் இவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதனையடுத்து பிரெஞ்சு மக்களின் கவனம் இந்த முதல் நோயாளி பக்கம் திரும்பியிருக்கிறது. கடந்த ஜனவரி 12ஆம் திகதி தான் புதிய வைரஸ் பரவும் தகவலை உலக சுகாதார நிறுவனம் முதலில் பிரகடனம் செய்தது.

அதன் பிறகு ஜனவரி 24 ஆம் திகதிக்குப் பின்னரே பிரான்ஸின் முதல் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். ஆனால் அதற்கு ஒருமாதம் முன்னரே ஒருவர் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதான இந்த அதிர்ச்சித் தகவல் மருத்துவ வட்டாரங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.

டிசெம்பர் 27 ஆம் திகதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தினத்தில் சேகரிக்கப்பட்ட இவரது மாதிரிகள் தற்போது மீளப் பரிசோதனை செய்யப்பட்டபோது இவர் நூறு வீதம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருந்தமை தெரியவந்துள்ளது.

சீன் – (Seine-Saint-Denis) பிராந்தியத்தில் உள்ள அவிசன் (Avicenne) மருத்துவமனையின் தீவிர சிகிச்சைக்குப் பொறுப்பான மருத்துவப் பேராசிரியர் Yves Cohen , பொண்டி Jean Verdier ஆஸ்பத்திரி மருத்துவர்களுடன் இணைந்து அம்ரூச் ஹமரின் தொற்றுப் பரிசோதனை முடிவை இப்போது வெளியிட்டிருக்கின்றார்.

பொண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயம் இருமல் காய்ச்சலுடன் தொண்டை நோவும் களைப்பும் காணப்பட்டது. சுவாசிப்பதற்கும் சிரமப்பட்டார். ஏற்கனவே நீரிழிவு, ஒவ்வாமை போன்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.

இன்றைக்கு பலருக்கும் தெரிந்த கொரோனா நோயின் அறிகுறிகள் அப்போது ஆரம்ப கட்டத்தில் இவரிடம் தென்பட்டமை பொபினி மருத்துவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

இவரைப்பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று நாள் சிகிச்சைகளுக்குப் பின்னர் சாதாரண சுவாசத் தொற்று எனத் தெரிவித்து வீடு திரும்ப அனுமதித்தனர்.

அதன் பின்னர் மீள நடத்தப்பட்ட மறு பரிசோதனைகள் இவரே பிரான்ஸின் முதல் கொரோனா நோயாளி (Patient zero) என்பதை உறுதி செய்துள்ளன. இப்போது சுமார் நான்கு மாதங்களுக்குப் பின்னர் தனக்கு கொரோனா தொற்று இருந்தது என்பதை அறிந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவங்களை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் விபரித்திருக்கிறார் அம்ரூச் ஹமர்.

இவரது குடும்பம் சீனாவுடன் தொடர்புகள் எதனையும் கொண்டிருக்கவில்லை. குடும்பத்தில் எவருமே குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளிநாட்டுப் பயணங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால் இவரது மனைவி பரிஸ் விமான நிலையத்துக்கு (Roissy-Charles-de-Gaulle)  அண்மையில் ஓர் அங்காடியில் (hypermarché) மீன் விற்பனைப் பகுதியில் பணிபுரிபவர் என்று கூறப்படுகிறது.

அங்கிருந்தே அவர் வைரஸ் கிருமியை வீட்டுக்கு காவி வந்திருக்கலாம் என்று இப்போது சந்தேகம் எழுந்துள்ளது.

(BFM தொலைக்காட்சியில் ஒரு விவரண நிகழ்ச்சியில் வெளியான தகவல்களின் தொகுப்பு இது)
Previous Post Next Post