இயக்கச்சியில் வெடிப்புச் சம்பவம்! தொடரும் விசாரணைகள்!! மேலும் ஒருவர் கைது!!!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 3ம் திகதி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த வெடிப்பு சம்பவத்தை அடுத்து வெடிப்பு இடம்பெற்ற அவரது வீடு பொலிசார் மற்றும் படையினரினால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அங்கிருந்து பிளாஸ்ரிக்கிளால் செய்யப்பட்ட குண்டு 2, கரும்புலி நாள் போஸ்ரல், போன், லப், டொங்குள், பென்மெரா, சிடி ஆகியன மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தன.

குறித்த பொருட்கள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவரின் மனைவியான பெண் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பெண் ஆசிரியை சட்ட ரீதியாக திருமணமாகாது குறித்த நபருடன் வாழ்ந்து வந்திருந்தார். குற்ற செயல் ஒன்றுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடய பொருட்களை அழிக்க முற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த ஆசிரியை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.


இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று இரவு கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் படையினரால் கைது செய்யப்பட்டு இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த இரத்தினசிங்கம் கமலகரன் என்ற 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், புலனாய்வு பிரிவினர், பொலிசார் மற்றும் படையினரால் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Previous Post Next Post