பிரான்ஸில் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்கள் தொடர்பில் அரசின் திடீர் அறிவிப்பு!

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
  • பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன்
வெளிநாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் 231 பேரை அடுத்த சில மணி நேரங்களில் நாடு கடத்துமாறு பிரான்ஸின் உள்துறை அமைச்சு பொலீஸ் தலைமையகங்க ளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

உள்துறை அமைச்சர் Gérald Darmanin இந்த உத்தரவை விடுத்துள்ளார் என்று “ஈரோப் 1″(Europe 1) தொலைக்காட்சி சேவை அறிவித்திருக்கிறது.

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் ஒழுங்கற்ற பதிவுகளோடு உள்ள தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதச் சந்தேகநபர்களே உடனடியாகத் தத்தமது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இந்த உத்தரவின் படி 231 தீவிரவாதிகளது பட்டியலில் தற்சமயம் சிறைகளில் உள்ள 180 பேர் உடனடியாக நாடு கடத்தப்படவுள்ளனர். ஏற்கனவே சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 51பேர் அடுத்த சில நாட்களில் தேடிப்பிடிக்கப்பட்டு அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

தீவிரவாதிகளைத் திருப்பி அனுப்பும் முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தபோதிலும் தற்போது அதனை விரைந்து நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பிரான்ஸ் வெளியேற்ற விரும்பும் தீவிரவாதக் கைதிகள் தொடர்பாக மொரோக்கோ நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதற்காக உள்துறை அமைச்சர் Gérald Darmanin கடந்த வெள்ளியன்று அங்கு விஜயம் செய்திருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து பாரிஸ் திரும்பிய வேளையிலேயே அன்றுமாலை கல்லூரி ஆசிரியரின் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது.
விரைவில் மேலும் பல தீவிரவாதக் கைதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாகப் பேச்சு நடத்துவதற்காக அமைச்சர் Gérald Darmanin அல்ஜீரியாவுக்கும் துனீசியாவுக்கும் செல்லவிருக்கிறார்.

ஆசிரியரது படுகொலையை அடுத்து தீவிரவாதிகள், தீவிரவாதச் சந்தேக நபர்கள் தொடர்பில் அதிர்ச்சி தரும் முடிவுகளை எடுக்க அரசு தீர்மானித்துள்ளது.

இதேவேளை-

தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்களை மிக அவதானத்துடன் பரிசீலிக்குமாறு பொலீஸ் தலைமையகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

சில நாடுகளைச் சேர்ந்தவர்களது புகலிடக் கோரிக்கைகள் இனிமேல் வழமையான நடைமுறைகளின்படி பரிசீலனைக்கு எடுக்கப்படமாட்டாது என்ற தகவலையும் உள்துறை அமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.

47 வயதான ஆசிரியர் சாமுவல் பட்டியை தலை துண்டித்துக் கொலை செய்த செச்சினிய நாட்டைச் சேர்ந்த இளைஞனுக்கு சில மாதங்களுக்கு முன்னரே அவரது 18 ஆவது வயதில் வதிவிட அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்திருக் கிறது. இதனை அடுத்தே தஞ்சம் வழங்கும் நடைமுறைகளை கடுமையாக்குவதற்கு பிரெஞ்சு அரசு முடிவு செய்திருக்கிறது.

ஆசிரியர் படுகொலையை அடுத்து உடனடியாகவும் அடுத்த கட்டமாகவும் விரைந்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாட்டின் பாதுகாப்புச் சபை நேற்றிரவு கூடி மூன்று மணிநேரம் ஆராய்ந்துள்ளது. அதிபர், பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் உட்பட ஆறு பேர் மட்டும் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஊடகங்களுக்கு விரிவாக வெளியிடப்படவில்லை என்று செய்தி ஏஜென்ஸிகள் தெரிவித்தன.

எனினும் –

“இஸ்லாமியவாதிகள் இனிமேல் பிரான்ஸ் மண்ணில் நிம்மதியாக உறங்க முடியாது” என்று அதிபர் மக்ரோன் அக் கூட்டத்தில் கடும் தொனியில் தெரிவித்தார் என்று BFM தொலைக்காட்சி சேவை நேற்றிரவு செய்தி வெளியிட்டிருக்கிறது.
Previous Post Next Post