பிரான்ஸில் புதிய வைரஸ் மார்ச் மாதமே தீவிரமாகும்! -தேசிய சுகாதார ஆராய்ச்சி மையம்


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தற்சமயம் நாடெங்கும் பரவி வருகின்ற இங்கிலாந்து வைரஸ் வரும் பெப்ரவரி மாத இறுதியில் தொடங்கி மார்ச் மாதத்தில் தீவிரமடையலாம்.

பிரான்ஸின் தேசிய சுகாதார மருத்துவ ஆராய்ச்சி மையம் (The Institut national de la santé et de la recherche médicale - Inserm) இவ்வாறு மதிப்பிட்டுள்ளது. சுகாதாரக் கட்டுப்பாடுகளை இறுக்கி தடுப்பூசி ஏற்றுவதை இயன்றவரை விரைவுபடுத்து வதன் மூலம் புதிய வைரஸின் மோசமான விளைவுகளைத் தணிக்க முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.

தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தைக் கவனத்தில் எடுக்காமல் நடத்தப்பட்ட மதிப்பீட்டு ஆய்வுகளின்படியே இத்தகவல் வெளியிடப்படுவதாகவும் ஆராய்ச்சி மையத்தின் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தற்சமயம் தினசரி புதிதாக அடையாளம் காணப்படுகின்ற தொற்றாளர்களில் 1.4 வீதமாகக் காணப்படுகின்ற இங்கிலாந்து வைரஸின் தொற்று அடுத்துவரும் வாரங்களில் அதிகரிப்பைக் காட்டும். 

பழைய கொரோனா வைரஸை விடவும் 50 முதல் 70 வீதம் கூடிய பரவும் வேகம் கொண்டது என்பதால் புதிய வைரஸ் தொற்றினால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் பெப்ரவரி - ஏப்ரல் மாதங்களுக்கு இடையே நாளாந்தம் 20 ஆயிரம் என்ற அளவை எட்டலாம்.

-இவ்வாறு தேசிய சுகாதார மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் மிக மோசமான சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்ற VOC 202012/01 என அழைக்கப்படும் புதிய வைரஸை "பைசர் - பயோஎன்ரெக்" தடுப்பூசி தடுக்கும் திறன் கொண்டுள் ளது என்று அதனைத் தயாரித்த கூட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் பைசர் தடுப்பூசி தயாரிப்பு வேகம் அதன் அவசர தேவையை ஈடு செய்யும் அளவுக்கு இல்லாதிருப்பதால் பிரான்ஸ் உட்பட பல நாடுகளுக்கு உறுதி அளித்தபடி அவற்றை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊசி ஏற்றும் பணிகள் தாமதப்படுத்தப் பட்டுள்ளன.

குமாரதாஸன், பாரிஸ்.
Previous Post Next Post