யாழ்.மண்டைதீவில் காணி சுவீகரிப்பு முயற்சி முறியடிப்பு! பொலிஸார் குவிக்கப்பட்டதால் பதற்றம்!! (வீடியோ)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் பொலிசார் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றமும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மண்டைதீவு ஜே07 கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட 29 பேரின் 18 ஏக்கர் பரப்பு காணி சுவிகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினரால் காணி அளவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்களும் பொது மக்களும் அரசியல்வாதிகளும் அங்கு திரண்டிருந்தனர்.

இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் காணிகளை அளவீடு செய்வதற்கு வருகை தந்திருந்தனர். இதன் போது காணிகளை அளவீடு செய்ய கடும் எதிர்ப்பு வெளிப்படுத்திய நிலையில் காணிகளை அளவீடு செய்யாமலே நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் செல்ல தயாரான நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் நில அளவை திணைக்கள அதிகாரிகள் மீண்டும் அங்கு வந்து காணிகளை அளவீடு செய்ய போவதாக அறிவித்தனர். ஆயினும் காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாதென்று எதிர்ப்பு தெரிவித்து, பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும், காணிகளின் உரிமையாளர்களும் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதன் பின்னர் அங்கு வருகை தந்த வேலணை பிரதேச செயலர் சோதிநாதன், இங்குள்ளவர்களின் எதிர்ப்பு காரணமாக காணி அளவிடுவதை நிறுத்துவதாகவும் காணி அமைச்சுடன் இது குறித்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அதுவரையில் காணி அளவீடு மேற்கொள்ளபடாதென்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து நில அளவை திணைக்களதினரும் பொலிஸாரும் திரும்பி சென்றனர். இதன் பின் அங்கு நின்றிருந்த மக்களும் அரசியல்வாதிகளும் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய 4 தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றாக இணைந்து எதிர்ப்பு போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post