கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை முன் குழந்தைகளுடன் போராட்டத்தை ஆரம்பித்த தந்தை! (படங்கள்)

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள விடியல் ஆடைத் தொழிற்சாலையின் முன்பாக 03 சிறுவர்களும் தந்தையும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தொழிற்சாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்றாளர்கள் 24 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஒரு பெண்ணின் பிள்ளைகளும் கணவனுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி அக்கராயன் மணியங்குளத்தினைச் சேர்ந்த தன்னுடைய மனைவிக்கு இன்று பிற்பகல் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற போதிலும் தனக்கு குறித்த தகவல் அறிவிக்கப்படவில்லை என்றும் குழந்தைகளை வைத்துக்கொண்டு தாம் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கநேருவதாகவும் தம்மை சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துமே போராட்டத்தில் ஈடுபடுவதாக குறித்த பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளார்.

குறித்த குடும்பத்தாருடன் ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் ஒரே நாளில் 261 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில் ஆடைத் தொழிற்சாலைகளை மூடுமாறு பலதரப்பட்ட தரப்புக்களாலும் கோரிக்கைகள் பரவலாக விடுக்கப்பட்டுவந்துள்ள சூழலிலும் இன்றுவரையில் ஆடைத் தொழிற்சாலைகளை மூட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 

இவ்வாறான சூழலில் பல குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றமை குறித்து இனியாவது உரிய தரப்புக்கள் செவி சாய்க்குமா? என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Previous Post Next Post