பிரான்ஸில் கொரோனாவின் நான்காம் அலை! ஒரே நாளில் அதிகூடிய தொற்று!! அதிபர் மக்ரோன் எச்சரிக்கை!!!


  • குமாரதாஸன், பாரிஸ்.
பிரான்ஸில் நான்காவது வைரஸ் அலை தீவிரமடைந்துள்ளது. நேற்று  மாலை வெளியாகிய சுகாதார அறிக்கையின் படி கடந்த 24 மணிநேர இடைவெளியில் 30 ஆயிரத்து 924 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. 773 பேர் மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 128 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் குறைந்த எண்ணிக்கையிலேயே
உள்ளன.

பிரான்ஸின் நிர்வாகத்துக்குட்பட்ட கடல் கடந்த தீவுகளில் - குறிப்பாக கரீபியன் தீவுகளாகிய-குவாத்லூப் (Guadeloupe) மார்ட்டினிக்(Martinique) பகுதிகளை டெல்ரா வைரஸ் தொற்று மிகமோசமாகத் தாக்கியிருக்கிறது.

அதே சமயம் நாட்டின் பெரு நிலப் பரப்பிலும் தொற்றுக்கள் எதிர்பாராத விதமாக
அதிகரித்துச் செல்கின்றன.

விடுமுறைக்கு மத்தியில் அதிபர் மக்ரோன் இன்றைய தினம் சிரேஷ்ட அமைச்சர்களுடன் வீடியோ வழியாகப் பாதுகாப்புச் சபையின் அவசர கூட்டத்தை நடத்தினார்.  நாட்டில் எதிர்பாராத விதமாக - ஆச்சரியமூட்டும் விதத்தில்-டெல்ரா தொற்றுக்கள் வேகமாகப் பரவி வருவதாக அவர் அக் கூட்டத்தில் அறிவித்தார்.

தடுப்பூசிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்திவந்த தீவுகள் தற்போது அதன் விளைவைச் சந்தித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.தடுப்பூசி ஏற்றுமாறு அந்த மக்களுக்கு அவர் அவசர அழைப்பு விடுத்தார்.
 
"சுகாதார நெருக்கடியை நாங்கள் இன்னமும் தாண்டிவிடவில்லை. அது எங்கள் பின்னால் இல்லை. நாங்கள் புதிய வைரஸ் திரிபுகளுடன் மேலும் பல மாதங்கள் வாழ வேண்டி இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது " -என்று மக்ரோன் அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.
 
தடுப்பூசி ஏற்றியோரது எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள குவாத்லூப், மார்ட்டினிக் தீவுகளில் மருத்துவமனை களின் அவசர பிரிவுகள் அனைத்தும் நிரம்பி சுகாதார வசதிகள் ஸ்தம்பிதமடைகின்ற அளவுக்குத் தொற்றாளர்கள் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்துள்ளது.

உல்லாசப் பயணத்துக்குப் பெயர்பெற்ற இவ்விரு தீவுகளிலும் கோடை விடுமுறை காலத்தில் உருவாகியுள்ள இந்த நெருக்கடி அங்கு பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இரவு ஊரடங்கை உள்ளடக்கிய பொது முடக்கக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் உல்லாசப் பயணிகள் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

பயணிகளை வெளியேற்றுவதற்கு 'எயார் பிரான்ஸ்' மற்றும் கரீபியன் விமான சேவை நிறுவனங்களது விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
 
பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகப் பிரதேசங்களுக்கான அமைச்சர் செபஸ்ரியன் லுகோன் (Sébastien Lecornu) சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் ஆகியோர் கரீபியன் தீவுகளுக்கு அவசர விஜயம் மேற்கொண்டுள்ளனர். 

பெரு நிலப்பரப்பில் இருந்து மருத்துவ உபகரணங்களுடன் மருத்துவப் பணியாளர்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மார்ட்டினிக் (Martinique) சனத் தொகையில் 22 வீதமானோர் மட்டுமே தடுப்பூசி ஏற்றியுள்ளனர். அங்கு ஒரு லட்சம் பேரில் 1,200 என்ற விகிதத்தில் தொற்று எண்ணிக்கை உள்ளது. 

இந்து சமுத்திரத் தீவாகிய ரியூனியனிலும்(Reunion Island) ஏற்கனவே பகுதியாகப் பொது முடக்கம் பேணப்பட்டு வருகிறது. பசுபிக் தீவுக் கூட்டங்களாகிய பொலினேசியாவிலும் (French Polynesia) வைரஸ் அலை தீவிரமடைந்துள்ளது. அங்கு இரவு ஊரடங்குநடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post