லண்டனில் சூட்டுச் சம்பவம்! சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு!! தாக்குதலாளியும் சடலமாக மீட்பு!!! (படங்கள்)


  • குமாரதாஸன், பாரிஸ். 
தெற்கு லண்டன் பிளைமவுத் (Plymouth) பகுதியில் 23 வயதான இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பத்து வயதான சிறுமி, மற்றும் இரண்டு
பெண்கள் அடங்குவர்.

தாக்குதலாளியின் உடலும் சூட்டுக் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளது என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
 
நீண்ட துப்பாக்கியுடன் காணப்பட்ட இளைஞன் தனது குடும்பத்தவர்களையும் எதிர்ப்பட்டவர்களையும் கண்டபடி சுட்டுள்ளார் என்று முதலில் வெளியான தகவல்கள் தெரிவித்தன. 

பாரம் தூக்கும் வாகனம் ஒன்றின் சாரதி எனக் கூறப் படும் அந்த இளைஞன், முதலில் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்தவர்களைச் சுட்டுவிட்டு வெளியே வந்து வழிப்போக்கர்களையும் தாக்கியுள்ளார்.

காயமடைந்த சிலர் அம்புலன்ஸ் ஹெலி மூலம் மீட்கப்பட்டனர். நேற்றிரவு பொலீஸார் சம்பவம் நடந்தபகுதியை மூடித் தேடுதல்களை மேற்கொண்டனர்.

இந்தச் சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று மறுத்துள்ள அதிகாரிகள்,பிரதேச மக்களை அமைதி பேணுமாறு கேட்டுள்ளனர். தனது அதிர்ச்சியை வெளியிட்டிருக்கின்ற உள்துறை அமைச்சர் ப்ரிதி பட்டேல் (Priti Patel), பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற மிக மோசமான சூட்டுச் சம்பவம் இதுவாகும்.


Previous Post Next Post