“என் சாவுக்கு காரணம்... ”ஹிஷாலினியின் அறையில் சிக்கிய முக்கிய ஆதாரம்! (படங்கள்)

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில், உயிரிழந்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணையில், குறித்த சிறுமி வசித்த அறையில் எழுத்தப்பட்டிருந்த சொற்றொடர் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

என் சாவுக்கு காரணம் என்ற சொற்றொடர், குறித்து அரசு ஆய்வாளர் (GA) உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சொற்றொடர் தமிழ் மொழியில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்டிருந்தாலும், அதில் ஆங்கில எழுத்துக்களே இருப்பதாகவும், ஒரு பேனாவைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார், சிஐடி மற்றும் அரசு ஆய்வாளர் அனைவரும் இந்த சொற்றொடரை மரணத்திற்கு முன் அல்லது பின் எழுதப்பட்டதா, விசாரணையை ஏமாற்றுவதற்காக எழுதப்பட்டதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் கடந்த மாதம் 3ம் திகதி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜூட் குமார் ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமி 12 நாட்களின் பின் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் நீண்ட காலமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த சிறுமியின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக மீள தோண்டியெடுக்கப்பட்டு, பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post