முல்லைத்தீவுக் கடலில் மூழ்கிய மூன்று இளைஞர்களின் சடலங்களும் மீட்பு! (வீடியோ)


வவுனியாவிலிருந்து முல்லைத்தீவுக்குச் சென்று கடலில் நீராட முற்பட்டபோது கடலில் மூழ்கிய இளைஞர்கள் மூவரும் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை இளைஞர்கள் மூவரும் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் நேற்று மாலை உடனடியாகவே மீட்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் தொடராக தீர்த்தக்கரைப் பகுதியில் மற்றொரு இளைஞரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டிருந்தது.

தற்போது முல்லைத்தீவின் அளம்பில் கடற்பரப்பில் மூன்றாவது இளைஞனின்  சடலம் மிதந்த நிலையில் படகில் தேடுதல் நடத்தியவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அது மீட்கப்பட்டுள்ளது.

இறுதியாக மீட்கப்பட்டவர் தோணிக்கல், வவுனியா என்ற முகவரியைச் சேர்ந்த விஜயகுமாரன் தர்சன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

வவுனியா மதவுவைத்த குளத்தை சேர்ந்த மனோகரன் தனுஷன் (வயது - 27), சிவலிங்கம் சகிலன் (வயது -26) தோணிக்கல் பகுதியை சேர்ந்த விஜயகுமாரன் தர்சன் (வயது - 26) ஆகியோரே கடலில் மாயமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post