தமிழகத்திற்குள் அதிகளவில் நுழையும் இலங்கைத் தமிழர்கள்! நடுக்கடலில் 37 மணிநேரப் போராட்டத்தின் பின் 10 பேர் தஞ்சம்!! (படங்கள்)

தமிழகத்திற்கு படகு மூலம் புறப்பட்ட நிலையில் படகு இயந்திரம் பழுதடைந்ததால் நடுக்கடலில் 37 மணி நேரம் உயிருக்கு போராடிய வவுனியாவைச் சேர்ந்த 10 பேர் நேற்று இரவு தமிழகம் சென்றுள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது பட்டிணி சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்து சேர்ந்ததாக வவுனியாவிலிருந்து அகதிகளாய் வந்துள்ள இலங்கை தமிழர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களான குழந்தைகளுக்கான பால் மா, அரிசி, பருப்பு, கோதுமை, மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் வாழும் மக்கள் தமிழகத்திற்கு அகதிகளாக படகுகள் மூலம் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (21) திங்கள்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து தமது சொந்த கண்ணாடி இழைப்படகில் ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என வவுனியாவைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடிக்கு புறப்பட்டுள்ளனர்.

நடுக்கடலில் படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் தத்தளித்த நிலையில் பல மணி நேர முயற்சிக்குப் பின் இயந்திரம் சரி செய்து நேற்று (22) செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்தை சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்த காலங்களில் உறவுகளையும் உடமைகளையும் இழந்து உயிர் பிழைத்தால் போதும் என 1990 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாய் வந்து போர் முடிந்த பின் 2012 ல் மீண்டும் இலங்கைக்கு சென்றிருந்தனர்.

தற்போது உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு பயந்து குழந்தைகளோடு மீண்டும் இரண்டாவது முறையாக அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளதாகவும், இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைய உள்ளதாகவும், எரிபொருள் தட்டுபாட்டால் வரமுடியாமல் அவதியுற்று வருவதாக தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ள வவுனியாவைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இதேவேளை செவ்வாய்கிழமை காலை முதல் இரவு வரை 16 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.

மேலும் சிலர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கடல் பாதுகாப்பு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.









Previous Post Next Post