234 அகதிகளுடன் 20 நாட்கள் கடலில் தரித்து நின்ற கப்பல்! ஏற்க மறுத்தது இத்தாலி!! அனுமதிக்கிறது பிரான்ஸ்!!!

மத்தியதரைக் கடல் பரப்பில் மீட்கப்பட்ட 234 குடியேறிகளுடன் கடலில் தரித்து நின்ற மீட்புக் கப்பல் ஒன்றைத் தனது துறைமுகத்துக்குள் அனுமதிப்பதற்கு பிரான்ஸ் அரசு முடிவுசெய்துள்ளது.

கப்பல் நாளை வெள்ளிக்கிழமை பிரான்ஸின் தெற்கில் உள்ள தூலோன் (Toulon) இராணுவத் துறைமுகத்துக்கு வந்து சேரும். அங்கு வைத்து அகதிகளுக்கு உடனடி மனிதாபிமான மருத்துவ உதவிகள் அனைத்தும் வழங்கப்படும். பாதுகாப்புப் பரிசோதனைகளுக்குப் பிறகு அகதிகளது புகலிட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் - என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா அறிவித்திருக்கிறார்.

கப்பலுக்குள் நிலைவரம் மிக மோசமாகியுள்ளது. அகதிகள் உடனடியாக அதிலிருந்து இறக்கப்பட்டு மனிதாபிமான மற்றும் மருத்துவ உதவிகள் அவர்களுக்கு வழங்கப்படவேண்டியது மிக அவசரமானது - என்று பிரெசெல்ஸில் ஐரோப்பிய ஆணையகமும் அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

"ஓஷன் வைக்கிங்" (Ocean Viking) என்ற அந்த மனிதாபிமான மீட்புக் கப்பல் (humanitarian ship) கடலில் மீட்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் அடங்கிய சுமார் 234 அகதிகளுடன் கடந்த 20 நாட்களுக்கு மேலாகத் துறைமுகம் செல்வதற்காக இத்தாலியின் அனுமதிக்காகத் தரித்து நின்றது.

ஐரோப்பிய மனிதாபிமான சேவை அமைப்பாகிய "SOS Mediterranee" என்ற தொண்டு நிறுவனத்தால் நோர்வே நாட்டின் கொடியுடன் இயக்கப்படுகின்ற அந்த மீட்புக் கப்பல் மத்தியதரைக் கடலில் தத்தளிக்கும் அகதிகளை மீட்டுக் கரைசேர்க்கின்ற பணியில் ஈடுபட்டு வருகிறது.

இத்தாலியில் ஜோர்ஜியா மெலோனி தலைமையிலான புதிய தீவிர வலதுசாரி அரசு பதவியேற்ற பிறகு படகு அகதிகளை ஏற்றிவருகின்ற அந்தக் கப்பல் அங்கு துறைமுகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கப்பல் விவகாரம் தொடர்பில் பிரான்ஸ் - இத்தாலிஇடையே கடந்த சில நாட்களாகப் பெரும் இழுபறி நிலை காணப்பட்டது. இத்தாலியின் மறுப்பை பொறுப்பற்ற செயல் என்று கூறிப் பாரிஸ் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. இத்தாலி ஒரு பொறுப்புள்ள ஐரோப்பிய நாடு என்ற தகுதியைக் காப்பாற்றத் தவறியதற்காக பிரான்ஸ் தனது வருத்தத்தை வெளியிட்டிருக்கிறது.

மத்தியதரைக் கடற்பரப்பில் மீட்கப்படுகின்ற குடியேறிகளை அருகே உள்ள கிறிஸ், இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளின் துறை முகங்களுக்கு ஏற்றிச் சென்று இறக்குவதற்கான அனுமதியைக் கப்பல் நிறுவனம் கோருவது வழக்கம். மத்திய தரைக் கடலை அடுத்துள்ள நாடு என்ற வகையில் கப்பலின் அதிகாரிகள் இத்தாலி அரசின் அனுமதியைக் கோரி அதற்காகப் பல நாட்கள் காத்திருந்தனர். அதற்குள் கப்பலின் உள்ளே மனிதப் பேரவலம் உருவாகி அகதிகள் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கக்கூடிய நிலைவரம் தோன்றியிருந்தது. அதனையடுத்தே பிரான்ஸ் அந்தக் கப்பலைத் தனது துறைமுகத்துக்குள் அனுமதித்திருக்கிறது.

மத்தியதரைக் கடலில் இத்தாலியின் கீழே உள்ள சிசிலி தீவின் அருகே சர்வதேச கடற்பரப்பில் தரித்து நின்ற "ஓஷன் வைக்கிங்" (Ocean Viking) அங்கிருந்து தூலோன்(Toulon) நோக்கிப் புறப்பட்டுள்ளது.

கடலில் தனி நபர்களை அவர்கள் அவசர உதவி கோரிய நிலையில் கண்டால் கடலில் உயிர்ப் பாதுகாப்பை உறுதிசெய்கின்ற 1974 ஆம் ஆண்டின் சர்வதேச உடன்படிக்கையின் கீழ் அவர்களுக்கு மீட்பு உதவி வழங்கப்படவேண்டியது கட்டாயம் ஆகும்.
Previous Post Next Post