மீண்டும் தாக்குதல் அச்சம்! தேவாலயத்திற்குள் புகுந்த முஸ்லிம் பெண்களால் பதற்றம்!!

மட்டக்களப்பு புனித செபஸ்டியன் தேவாலயத்திற்குள் நுழைந்த இரு முஸ்லிம் பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது இவர்கள் நால்வரும் உள்நுழைந்ததால் அங்கு பதற்றம் நிலவியது.

தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமாக ஆலயத்திற்கு வந்த இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் அமைந்திருக்கும் புனித செபஸ்ரியன் தேவாலயத்தில் இன்று காலை ஆராதனை இடம்பெற்றுள்ளது. இதன்போது தேவாலயத்தினுள் இரு முஸ்லிம் பெண்கள் உட்பட 4 பேர் நுழைந்துள்ளனர். அதனால் தேவாலயத்திற்குள் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆராதனையில் ஈடுபட்ட மக்கள், அருட்தந்தையூடாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களை பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண், அவரின் 39 வயதுடைய வாய் பேசமுடியாத மகள், 23 வயதுடைய மகன், 33 வயதுடைய மருமகன் ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.

பொலிஸார் அவர்களிடம் தொடர்ந்தும் மேற் கொண்ட விசாரணையின் போது, மகளின் நோயை குணப்படுத்துவதற்காக இரு மோட்டார் சைக்கிளில் சீயோன் தேவாலயத்துக்கு அவர்கள் சென்றதாகவும், அங்கு ஆராதனைகள் முடிந்து ஆலயம் பூட்டப்பட்டிருந்ததையடுத்து, ஆராதனை வேறு இடத்தில் நடப்பதாக அறிந்து இந்த தேவாலயத்துக்குள் வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதோடு, இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post