பொன்னாலைக் கடலில் காணாமற்போன மீனவர் சடலமாக மீட்பு!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பொன்னாலை கடலில் காணாமற்போன மீனவர், காரைநகர் ஊரி கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (03) வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பொன்னாலை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் அவர் காணாமற்போயிருந்தார்.

சுழிபுரம் பெரியபுலோவைச் சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (வயது-37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் கடற்றொழிலுக்கு சென்ற ஊரி கடற்றொழிலாளர்கள் கடலில் சடலத்தை அவதானித்து அது தொடர்பாக கிராம அலுவலகர் எஸ்.மயூரனுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் மூலம் சுழிபுரத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உறவினர்களும் காரைநகர் ஊரி கடற்றொழிலாளர்களும் கடலுக்கு சென்று சடலத்தை மீட்டு வந்தனர்.

சடலம் தற்போது ஊரி கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post