
கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை நாகேந்திரபுரம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் மீது படைத்தரப்பினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகததில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நாகேந்திரபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி ஊடாக மணல் ஏற்றியபடி சென்ற வாகனத்தினை படையினர் நிறுத்துமாறு தெரிவித்ததாகவும் இருந்தபோதிலும் அதனையும் மீறி வாகனம் பயணித்தமையால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது சாரதியின் உதவியாளர் காயம் அடைந்த நிலையில் தருமபுரம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.



