யாழில் நடந்த கொலைச் சம்பவம்! தலைமறைவாகியிருந்த இரு சந்தேக நபர்கள் திருமலையில் கைது!!


வல்வெட்டித்துறையில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர்கள் இருவரும் 3 வாரங்களின் பின்னர் இன்று திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் இன்று காலை திருகோணமலையில் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றையவர் தப்பித்திருந்தார். எனினும் 22 வயதான அவரும் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டார்.

கொலையில் ஈடுபட்டவர்களாக உறவினர்கள் இருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வந்தனர்.

சந்தேக நபர்கள் திருகோணமலை பொலிஸ் பிரிவில் உள்ள சின்னத்தோட்டம் மதவடி என்ற பகுதியில் தலைமறைவாகி உள்ளதாக காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிறப்புக் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

தற்போதைய கோவிட்-19 நிலமை காரணமாக அங்கு சென்று சந்தேக நபர்களைக் கைது செய்ய முடியாத நிலையில் திருகோணமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவலளிக்கப்பட்டது.

திருகோணமலை பொலிஸார் எடுத்த நடவடிக்கையில் 41 வயது சந்தேக நபர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

மற்றையவர் பொலிஸாரின் வருகையறிந்து தப்பியோடிய நிலையில் இன்று மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் திருகோணமலை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post