நேற்றிரவு மிரிஹானவில் நடந்தது என்ன? 45 பேர் கைது! ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கை!! (படங்கள்)

06 பொலிஸ் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டது.

அந்த பொலிஸ் பிரிவுகளில் வசிப்பவர்கள் தற்போது வழமை போன்று தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு, நுகேகொட மற்றும் கல்கிசை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் கம்பஹா மாவட்டத்தில் களனி பொலிஸ் பிரிவிலும் நேற்று இரவு 12.30 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்பட்டத்து.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வசிக்கும் நுகேகொடை மிரிஹான பகிரிவத்த வீதியின் நுழைவாயிலுக்கு அருகில் பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாகவே ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்குத் தீர்வு காணுமாறு கோரி நேற்று இரவு சுமார் 7.30 மணி முதல் ஜூப்ளி போஸ்ட் சந்திக்கு அருகில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகிரிவத்தை வீதியை மறித்து பல மணிநேரம் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சி பேதமின்றி வருகை தந்த பொதுமக்கள் நேற்று இரவு சுமார் 7.30 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக நுகேகொட மஹரகம 119 வீதி முற்றாக தடைப்பட்டது.

பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் சூடான சூழ்நிலை நிலவியது.

இதனைக் கட்டுப்படுத்த பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைவதைத் தடுக்க பொலிஸாரும் இராணுவத்தினரும் கடுமையாக முயன்றதைக் காணமுடிந்தது.

இரு பிரிவினருக்கும் இடையே கல் வீச்சு தாக்குதல் நடந்தது. இதையடுத்து பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தி கட்டுப்படுத்தினர்.

எவ்வாறாயினும், தற்போது நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், மிரிஹானவில் நிலமை முற்றாக அமைதியாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, போராட்டத்தின் போது மிரிஹான பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், சிறிது நேரத்திலேயே மின்சாரம் வழமைக்குத் திரும்பியது.

மேலும், அப்பகுதியில் இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஏராளமானோர் தெரிவித்திருந்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

காயமடைந்தவர்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் பல பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவர்.

ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்திற்கு சிலர் தீ வைத்து எரித்துள்ளதுடன், கல் வீச்சு காரணமாக மேலும் பல வாகனங்கள் சேதமடைந்தன.

கொழும்பு-கண்டி வீதியை கடக்கும் குழுவொன்றின் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் காரணமாக நேற்று இரவு களனி, தலுகம பகுதியில் கொழும்பு-கண்டி வீதி முற்றாக தடைப்பட்டிருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு கோரி வீதியில் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை நேற்று இரவு இடம்பெற்ற கலவரம் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

44 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பத்தின் போது ஐந்து பொலிஸார் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு நடந்த வன்முறை! ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கை!!

நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தீவிரவாத குழுவும் ஊடுருவ வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தீவிரவாதிகள் குழுவொன்று குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வன்முறை நிலைமையை ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளதென ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரும்புக் கட்டைகள், பொல்லுகள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல், ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டிவிட்டு மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பலர் திட்டமிட்ட தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நாட்டில் அரபுக் காடுகளை உருவாக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

சமூக ஊடகங்களை அநாமதேயமாகப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டைச் சீர்குலைக்கும் நோக்கில் இந்தக் கலவரம் நடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post