கப்பலை விட்டு இறங்கப் பின்னடித்த இலங்கை அகதிகள்! வியட்நாம் படைத் தளங்களில் தங்கவைப்பு!! (படங்கள்)

ஜப்பானியக் கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்ட இலங்கை அகதிகள் 303 பேரும் நேற்று அந்தக் கப்பலில் இருந்து பகுதி பகுதியாக இறக்கப்பட்டு கடற்படைக் கப்பல்கள் மூலம் வியட்நாம் நாட்டின் வுங் தோ (Vung Tau) நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களை அங்கு கரையோரக் காவல் படை முகாமிலும் இராணுவத் தளங்களிலும் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்று வியட்நாம் செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்தது.

வுங் தோ (Vung Tau) நகரில் உள்ள பா றியா (Ba Ria) மாவட்டத்தில் எல்லைப் படைக் கட்டளை மையத்திலும் (Border Guard Command) Dat Do மற்றும் Xuyen Moc மாவட்டங்களில் உள்ள வியட்நாமிய படைத் தளங்களிலும் அகதிகள் தங்கவைக்கப்படவுள்ளனர்.

சேதமடைந்த மீன் பிடிக் கப்பல் ஒன்றில் இருந்து ஜப்பானுக்குச் சொந்தமான "ஹெலியோஸ் லீடர்" (Helios Leader) என்ற கப்பலுக்கு மாற்றி ஏற்றப்பட்ட அகதிகள் அங்கு வைத்து மருத்துவக் குழு ஒன்றினால் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் சிலருக்கு நெரிசல் காரணமாகச் சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன என்றும் பெரும்பாலும் அனைவரும் ஆரோக்கியமான நிலையில் காணப்படுகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் அதிலிருந்து கடற்படைக் கப்பல்களுக்கு மாற்றப்பட்டனர்.

முதல் தொகுதியாக 155 அகதிகளை ஏற்றிய கடற்படைக் கப்பல் நேற்றிரவு வியட்நாம் நேரப்படி 20.10 மணிக்கு Vietsovpetro port என்ற துறைமுகத்தை வந்தடைந்தது என்று தெரிவிக்கப்பட்டது. தங்கள் பொதிகள் மற்றும் குழந்தைகளுடன் காணப்பட்ட அகதிகள் முதலில் கப்பலை விட்டுத் துறைமுகத்தில் இறங்குவதற்குப் பின்னடித்தனர் என்றும், அதிகாரிகள் அவர்களுக்கு ஆங்கில மொழி மூலம் விளக்கம் அளித்த பிறகே அவர்கள் இறங்குவதற்குச் சம்மதித்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

துறைமுகத்தில் இறக்கப்பட்ட அகதிகள் அங்கிருந்து பஸ்கள் மூலம் தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அகதிகளில் இரண்டாவது தொகுதியினரை ஏற்றிய அடுத்த கப்பல் நேற்று நள்ளிரவு துறைமுகத்துக்கு வந்துசேர இருந்தது.

அகதிகள் அனைவருக்கும் ஆரம்ப கட்டமாக அவசர உதவிகளை வழங்கி அவர்களை இருப்பிடங்களில் தங்க வைப்பதே தங்கள் முதல் பணி என்றும் அதன் பின்னர் வியட்நாமுக்கான இலங்கைத் தூதரகத்துடன் மாகாண அதிகாரிகள் தொடர்பு கொண்டு அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

-இவ்வாறு வங் தோ மாகாணத்தின் பா றியா பகுதி மக்கள் குழுவின் (Ba Ria Vung Tau Provincial People's Committee) உதவித் தலைவர் Nguyen Cong Vinh தெரிவித்திருக்கிறார்.

Previous Post Next Post