13 வயது மாணவர்கள் இருவர் இடையே பாடசாலையில் மோதல்! தலையில் போத்தலால் தாக்கப்பட்டு மாணவன் பலி!!

பாடசாலை மாணவர்கள் இருவர் இடையே ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறியதால் 13 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். தம்பிலுவில் ஏ.பி.சி வீதியைச் சேர்ந்த சிவபாலன் கிஷாந் (வயதி-13) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒரே வகுப்பில் மாணவர்கள் இருவரும் பயில்கின்றனர். இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை முடிவடைகின்ற நேரத்தில் உயிரிழந்த மாணவன் வகுப்பறை மேசையில் வர்ணப்பூச்சினால் வரைந்துள்ளார்.

சகமாணவனின் கை அந்த வர்ணப்பூச்சில் பட்டதுடன் வரையப்பட்ட பூச்சு அழிந்துவிட்டது. இதனையடுத்தே இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் தலையில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தலால் தலையில் தாக்கப்பட்ட மாணவனின் வாயினால் நுரை தள்ளியுள்ளது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும் உயிரிழந்துவிட்டார் என்று திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவனை தாக்கிய சக மாணவனும் சிகிச்சைக்காக திருக்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அம்பாறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
Previous Post Next Post