யாழில் கணவன், மனைவியால் நடத்தப்பட்ட விபசார விடுதி முற்றுகை! (படங்கள்)

யாழ்ப்பாணம் கோப்பாய்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் விபசார விடுதி இயங்கி வந்ததாகத் தெரிவித்து இவ் வீட்டை அப் பகுதி இளைஞர்கள் முற்றுகையிட்டனர்.

அத்துடன் அவ் வீட்டில் வாடகைக்கு இருந்த கணவன், மனைவியும் அரசியல் பிரதிநிதிகளின் தலையீட்டால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 அவர்களுடன் விபரசார நடவடிக்கைக்காக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட இருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவ இடம்பெற்ற வீட்டில் வாடகைக்கு இருந்த கணவன், மனைவியும் வடக்கில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் வலையமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கோப்பாய் வடக்கில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் வாடகைக்கு குடியமர்ந்திருந்தனர்.

அவர்களுடைய வீட்டுக்கு தினமும் ஆண், பெண் புதுப்புது முகங்கள் வருகை தந்த வந்தமே இருந்தனர்.

சந்தேகம் கொண்ட ஊரவர்கள் அந்த வீட்டில் உள்ளவர்கள் தொடர்பில் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று (டிசெ.7) ஊரவர்கள் ஒன்றுகூடி வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர்.

அங்கு இருந்த இரண்டு ஆண்கள் மட்டும் பொதுமக்களால் பிடிக்கப்பட்டனர். எனினும் பெண்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்தனர்.

சம்பவம் தொடர்பில் வலி.கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் இராநாதன் ஐங்கரன் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற இருவரும் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

எனினும் கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுக்க பின்னடித்த நிலையில் பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன் ஐங்கரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் வலி.கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கும் தகவல் வழங்கினர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய சம்பவ இடத்துக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார், அந்த வீட்டில் வாடகைக்கு குடியமர்ந்திருந்தோரை அங்கிருந்து வெளியேறுமாறு பணித்ததுடன், பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சுழிபுரம், சங்கானையைச் சேர்ந்த இருவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த வீட்டில் வாடகைக்கு குடியமர்ந்திருந்த சுமார் 40 -45 வயது மதிக்கத்தக்க கணவனும் மனைவியும் ஏற்கனே அச்சுவேலிப் பொலிஸ் பிரிவில் வசித்து விபச்சார நடவடிக்கையை முன்னெடுத்தனர் என்ற ஊர் மக்களின் குற்றச்சாட்டால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், அந்தக் குடும்பத்துக்கும் கிளிநொச்சி, வவுனியாவில் இயங்கும் விபச்சார விடுதிகளுக்கும் தொடர்புள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.




Previous Post Next Post