இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்தது பிரான்ஸ்!

இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரான்ஸ் அரசாங்கம் நேற்று தளர்வுகளை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக ‘அத்தியாவசிய பயணங்களை மாத்திரம்’ மேற்கொள்ளுமாறு, இலங்கைக்கான பயண ஆலோசனையில் தமது பிரஜைகளை பிரான்ஸ் அரசாங்கம் கோரியிருந்தது.

தற்போது, குறித்த பரிந்துரையை, இலங்கைக்கான பயணத்தில் ‘எச்சரிக்கையுடன் இருங்கள்’ என்றவாறு தளர்த்தியுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

நாட்டில் பெரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லாததால், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை எதிர்வரும் 18, க்குப் பிறகு மேலும் நீடிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்த மறுநாளில், பயண ஆலோசனையை பிரான்ஸ் புதுப்பித்துள்ளது.

இலங்கையின் சமீபத்திய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் பயணம் செய்யும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரான்ஸ் அரசாங்கம் தமது குடிமக்களுக்கு பரிந்துரைத்துள்ளது.

பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா வாகனங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதில் நாடு தற்போது சிறந்த இடத்தில் இருப்பதாகவும், உள்நாட்டுப் பயணத்திற்காக உள்ளூர் பயண முகவர்களுடன் திட்டங்களை மேற்கொள்ளுமாறும் சுற்றுலாப் பயணிகளை பிரான்ஸ் வலியுறுத்தியது.

இந்த புதுப்பிப்பு குறித்து கருத்து தெரிவித்த இலங்கை உள்நாட்டு சுற்றுலா பணியாளர்கள் சங்கம் (SLAITO), இலங்கை சுற்றுலாத்துறையின் மறுமலர்ச்சிக்கு இந்த தளர்வு மிகவும் அவசியமானது என்றும் இதனை தாம் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post