வடக்கில் இடம்பெறும் வாள்வெட்டு! ஜனாதிபதி விடுத்த உத்தரவு!!

வடக்குக் கிழக்குப் பகுதியில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அதிரடி உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.

இச் சம்பவங்ளைக் கட்டுப்படுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, சுமுக நிலைமைகளை ஏற்படுத்துமாறு வட பிராந்திய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் யாழ்.ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் றோயல் இம்மானுவேல், மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆகியோர் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தனர்.

இதன்போது வடக்குக் கிழக்கில் அதிகரித்து வரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக ஆயர்கள், ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இதன்போது அந்த இடத்திலிருந்தே வட பிராந்திய பொலிஸ்மா அதிபரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி, வடக்கு நிலைமைகளை அறிந்து கொண்டதுடன், ஆயர்கள் தெரிவித்த விடயங்களைச் சுட்டிக்காட்டி, உடனடியாக சட்டம் ஒழுங்கை பேணுமாறும், இவ்வாறான குற்றச்செயல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறும் உத்தரவிட்டார்.

மக்களின் அமைதியான வாழ்க்கைக்குப் பங்கம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளிற்கும் எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.

இதேவேளை அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பாக சட்டத்தினூடாக விரைவுபடுத்தி வழக்குகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்களை அறிவுறுத்தியுள்ளதாகவும் ஆயர்களிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post