யாழ்.இந்துக் கல்லூரிக்கு நிரந்தர அதிபரை நியமித்தது கல்வி அமைச்சு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் நீக்கம் செய்யப்பட்டிருந்தாா்.

இந் நிலையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பதில் அதிபராக கல்வி அமைச்சில் உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த இ.செந்தில்மாறன் நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது கல்வி நிர்வாக சேவை அலுவலராகக் கடமையாற்றுபவர்களில் திறமை அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் பொதுச் சேவை ஆணைக் குழுவினால் தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்தின் கீழேயே யாழ்.இந்துக் கல்லூரியின் பதில் அதிபர் இ.செந்தில்மாறன் நிரந்தர அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் யாழ்.இந்துக் கல்லூரியின் பிரதி அதிபராகக் கடமையாற்றிய திருமதி லலிதா இரவீந்திரன் கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியின் அதிபராக பொதுச் சேவை ஆணைக்குழுவின் முடிவுக்கு அமைய கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பாடசாலை அதிபர் நியமனத்தின் ஒரு கட்டமாக சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபராக சர்வேஸ்வரனும், நெல்லியடி மத்திய கல்லூரி அதிபராக கிருஷ்ணகுமாரும் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஏற்கனவே அந்தப் பாடசாலைகளின் அதிபர்களாக கடமையாற்றி வந்தபோதிலும் கல்வி அமைச்சின் முறைப்படியான நேர்முகப் பரீட்சையின் பின் தற்போது நிரந்தர அதிபர்களாக்கப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post