யாழில் கொரோனா அச்சம்! இழுத்து மூடப்படும் கல்வி நிலையங்கள்!! ஆளுநர் பணிப்பு!!!

இலங்கையில் இரண்டு கொரோனா வைரஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டதையடுத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாத முதலாம் தவணை விடுமுறையை இவ்வாறு முன்கூட்டி வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் மீண்டும் இரண்டாம் தவணைக்காக பாடசாலை ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை வட மாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் சிறப்புப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் ஏற்படக் கூடிய ஆபத்தில் இருந்து எமது மாணவ சமூகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இன்று முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை இலங்கையில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மாணவர்களுடைய நலனை மேலும் உறுதிப்படுத்தும் பொருட்டு வட மாகாணத்தில் உள்ள அனைத்துத் தனியார் கல்வி நிலையங்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ் ஒழுங்கினை உள்ளுராட்சி சபைகள் உரிய முறையில் மேற்பார்வை செய்து அர்ப்பணிப்புடன் இதனை நடைமுறைப்படுத்தும்படியும் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார் - என்றுள்ளது.

Previous Post Next Post