யாழில் மீண்டும் கொரோனா அபாயம்! கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் தப்பி வந்த 7 பேரைத் தேடுகிறது சுகாதாரத்துறை!!

சட்டவிரோதமான முறையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த ஏழு நபர்களால் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பில் புத்தகக் கடை ஒன்றில் பணியாற்றி வந்திருக்கின்றார். அவர் இன்று யாழ்ப்பாணம் வந்த பார ஊர்தி ஒன்றில் சொந்த ஊருக்கு திரும்பியிருக்கின்றார்.

கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சட்டவிரோதமாக ஊர் திரும்பியிருக்கின்ற விடயம் சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனை அடுத்து அவருடைய வீட்டுக்கு சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் சென்று அவரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இதனால் அந்தக் கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சங்கானைக்கு இருவரும் சாவகச்சேரிக்கு நால்வரும் என மேலும் அறுவர் சட்டவிரோதமாக யாழ்ப்பாணம் திரும்பியிருக்கின்றமையும் சுகாதாரத்துறைக்குத் தெரியவந்துள்ளது.

இதில் சங்கானையைச் சேர்ந்தவர்களில் ஒருவர் தெல்லிப்பழையில் தலைமறைவாகியிருந்த நிலையில் கண்டறியப்பட்டு அவரும் தற்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாா்.

30 வயதான இவா், கொழும்பு டாம் வீதியில் தங்கியிருந்து மேசன் வேலை செய்வதாகவும் அங்கிருந்து மிளகாய் ஏற்றி வந்த பாரவூர்தியில் ஏறி இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய போதும் சந்தேகங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் வருகை தந்த பாரவூர்திகளின் சாரதிகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்புப் பொலிஸ் அணி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை இவ்வாறு வெளிமாவட்டங்களில் இருந்து சட்டவிரோதமான முறையில் வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பவா்கள் தொடா்பில் அறிந்தால் உடனடியாக பொலிஸாருக்கோ அல்லது சுகாதாரத் துறையினருக்கோ தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Previous Post Next Post