யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, லண்டனில் பிரபல மிருதங்க வித்துவான் கொரோனாவுக்குப் பலி!

யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல மிருதங்கக் கலைஞரும் ஆனந்தலயா மிருதங்க பள்ளியின் இயக்குநருமான கந்தையா ஆனந்தநடேசன் (வயது 59) கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று வியாழக்கிழமை லண்டனில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பெண் பிள்ளைகள் இருவரின் தந்தையான இவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை பிறப்பிடமாவும் புலம்பெயர்ந்து லண்டனில் கென்டன், கரோ நகரை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 17 நாட்களாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த அவர் கடந்த சில நாட்களாக கோமா நிலையில் காணப்பட்டதாகவும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையின் மிக மூத்த பிரபல்யமான மிருதங்கக் கலைஞர் க.ப.சின்னராசா அவர்களின் மாணவரான ஆனந்தநடேசன், லண்டனில் மிகப் பிரபல்யமான மிருதங்கக் கலைஞராக விளங்கியிருக்கின்றார்.

ஆனந்தலயா மிருதங்கப் பள்ளி என்கிற இசைக் கல்லூரியை லண்டனில் நிறுவி பல நூற்றுக்கணக்கான மிருதங்கக் கலைஞர்களை வளர்த்தெடுத்த அவர் பெருமளவான மாணவர்களின் மிருதங்க அரங்கேற்றத்தினையும் நிகழ்த்தியிருக்கின்றார்.

லண்டனில் வாழ்ந்து வந்த மிகச்சிறந்த மிருதங்கக்கலைஞரின் இழப்பு கலைத் துறைக்கு பாரிய இழப்பாகும்.

Previous Post Next Post